காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, March 31, 2014

அரசுகளும் எல்லைகளும் - புவி அரசியல் பற்றிய குறிப்புகள்





உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது. நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் இரு உலகப்போர்கள் புவி அரசியல் பற்றிய கருத்தாக்கத்தை முதன் முதலாக உயிர்பெறச் செய்தன.  உலக கண்டங்களின் எல்லைகளும் மறு அர்த்தம் பெற்றன.  புவிஅரசியல் என்ற சொல்லாடல் முதன் முதலாக  ஸ்வீடன் நாட்டு அறிஞரான ருடால்ப் கெஜ்லன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க கால அர்த்தம் என்பது குறிப்பிட்ட புவியியல் சூழலில் இருக்கும் அரசியல் அரசை குறிப்பதாகும். பிந்தைய கட்டத்தில் அரசுக்கும், பூமிக்கும் இடையேயான உறவை குறித்தது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆளும் அரசு எவ்வாறு அதனோடு இயைந்த நலன்களை வெளிப்படுத்துகிறது என்பதும் புவி அரசியலின் முக்கிய கூறாக இருந்தது. மேலும் அரசியல் வெளியின் அதிகாரம் குறித்தும் புவி அரசியல் குறிப்பிடுகிறது. மேலும் ஒரு நிலப்பகுதியின் எதார்த்தம் சார்ந்த எல்லா சுதந்திர அரசியல் வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது. புவி அரசியல் மண் சார்ந்த அரசின் முழு அதிகாரத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வெளிக்கும் அதன் கட்டமைப்புக்குமான அரசியல் அங்கதத்தைப்பற்றிய அறிவியல்.  அரசு என்ற அங்கத்தின் வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றின் அரசியல் செயல்பாடு இப்படியான பல வியாக்கினங்கள் புவி அரசியலுக்கு அளிக்கப்படுகின்றன. மேற்கண்ட எல்லா வியாக்யானங்களும் இரு நூற்றாண்டுகளின் வரலாற்று இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டவை. விரிவான அர்த்தத்தில் புவி அரசியல் என்பது ஓர் அரசின் வெளியுறவுக்கொள்கை அடிப்படையிலான புவியியல் ஆய்வு முறை. இந்த அர்த்தத்தில் தான் உலக நாடுகளின் அரசுகள் புவி அரசியலை அணுகுகின்றன.

புவி அரசியல் 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டன் மற்றும் பிரான்சின் காலனியாதிக்க நடவடிக்கைகளோடு தொடங்குகிறது எனலாம். காலனியாதிக்கம் தன் எல்லையை விரிவாக்கம் செய்து கொள்ள மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கத்தொடங்கியது. இது காலனிய அரசிற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் நிலப்பரப்பிற்கும் இடையே நேரடி உறவை ஏற்படுத்தியது. பிரிட்டன் காலனியம் இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்திப்பொருட்களை கபளீகரம் செய்தது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த விவசாயத்தை மாற்றி தங்களின் விவசாய முறையை அறிமுகப்படுத்தியது போன்றவற்றை குறிப்பிடலாம். மேலும் தேயிலை, காப்பி போன்ற பயிர்களும் இதில் அடங்கும். காலனிய அரசிற்கு புவியின் எல்லையை விரிவுபடுத்துவது அதன் பரந்துபட்ட நலன்களுக்கு உகந்ததாகும். புவி அரசியலை உள்வாங்கிய காலனிய சிந்தனை ஐரோப்பிய மறுமலர்ச்சி கால சிந்தனை முறையில் இருந்தே தொடக்கம் பெற்று விட்டது. இம்மானுவேல் கான்டின் உள் அவதானம் மற்றும் தன்னிறைவு கோட்பாடு, ஹெகலின் ஜெர்மானிய சேவை மற்றும் வெளிப்புற விரிவாக்கம் ஆகியவை ஐரோப்பிய காலனிய முறைகளுக்கு பெரும் தூண்டலாக இருந்தன. மேலும் ஐரோப்பிய நாகரீகம் குறித்த மேன்மையும் இந்த காலனிய ஆட்சியாளர்களின் உட்கிடங்காக இருந்தன. இதன் தொடர்ச்சியில் பிஸ்மார்க் முன்னெடுத்த ஜெர்மானிய முழுமை கோட்பாடு அன்றைய அரசியல் தத்துவத்தின் இயங்கியலாக இருந்தது. மேலும் ரிட்டல், ஹும்போல்ட மற்றும் பிரடரிக் ரட்ஸல் போன்றோர் புவி அரசியலுக்கான குறிப்பிட்ட சில அம்சங்களை உருவாக்கினர். அதன் படி வெளியும், நிலைமையும் புவியின் மதிப்பையும் மக்களின் முடிவான விதியையும் நிர்ணயம் செய்கின்றன. இது அறிவியல் நிர்ணயவாத விதிகளின் அடிப்படையிலானது.  நிலைமையை பொறுத்தவரை குறிப்பிட்ட பகுதியில் அதன் இடம் மாறாத நிலையில் அது எப்போதும் அரசுகளுக்கும், தேசத்திற்கும்  அதே மாதிரியான உந்துவிசையை அளித்துக்கொண்டே இருக்கிறது. வெளியை பொறுத்தவரை  மக்களின் லட்சியத்தை அடைவதற்கான முக்கிய கூறு. எல்லா போர்களும் இந்த வெளியை வெற்றிக்கொள்வதற்கான போர்களே. இன்றைய நவீன காலகட்டத்தில் பிரதேசங்களை வெற்றிக்கொள்ளுவதே சிறந்த அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



18 ஆம் நூற்றாண்டில் காலனியம் உலகின் மூன்றில் இரண்டு பகுதியை தன் வயப்படுத்திக்கொண்டது. பெரும்பாலும் கீழைநாடுகள் தான் அதன் காலனிகளாக இருந்தன. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் மற்றும் பிரான்சின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்த நாடுபிடிக்கும் கொள்கை என்பது முந்தைய நிலபிரபுத்துவ அரசுகளின் எச்ச மனோபாவம். மேலும் 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து பல்வேறு விதமான மூலப்பொருட்களை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் பிரிட்டனுக்கு புதிய காலனிகளை கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புவி அரசியலின் நீட்சி இங்கிருந்து தொடங்கியது. விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் மனோபாவத்தோடு இந்த காலனிய அரசுகளின் நடவடிக்கைகளும் ஒத்துபோயின. தன் நிலத்தோடு தொடர்பில்லாத, அந்த பிரதேச பண்பாட்டோடு சம்பந்தமே இல்லாத ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் பெரும்பாலான ஆசிய ஆப்ரிக்க நாடுகள் வந்த போது அங்குள்ள மக்கள் தாங்கள் ஒரு நவீன ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதாக உணர்ந்தனர். அதுவரையிலும் தாங்கள் கட்டுண்டிருந்த நிலபிரபுத்துவ அரசுகளின் அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அரச கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆசிய கண்டத்தை பொறுத்தவரை மத்திய கிழக்கு முழுவதும் துருக்கிய உதுமானிய பேரரசும், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதியை ஸபாவித் பேரரசும், தெற்காசியாவை முகலாய பேரரசும் ஆட்சியமைத்துக்கொண்டிருந்தன. இந்த மூன்றுவகை பேரரசுகளையும் வென்றெடுத்து தன் புவி அரசியலை பிரிட்டன் வலுவாக நிறுவிக்கொண்டது. காலனிய அரசுகள் வரலாற்று அரசுகளாக இப்போது தான் மாற்றம் பெற்றன.


புவி அரசியல் தேசங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் நிலப்பரப்பு பற்றியும்  வெளிப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் பெரும் நிலப்பரப்புகள் உலக தீவுகள் (World Island)என்றழைக்கப்படுகின்றன. மற்றவை துணை தீவுகள். வல்லரசு உருவாக்கத்தின்  முக்கிய அடிப்படையே இது தான். முந்தைய இரு நூற்றாண்டுகளில் ஆசியாவில் இரஷ்யாவும், ஐரோப்பாவில் ஜெர்மனியும் இந்த தீவுகளின் மைய நிலப்பரப்பாக இருந்தன. அதாவது இதயப்பகுதி என்றழைக்கப்பட்டன. ஸ்டாலினும், ஹிட்லரும் இரண்டாம் உலகப்போரில் நடத்திய போர் நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை இந்த மைய நிலப்பரப்பு சார்ந்த அரசியல் தான். இரஷ்யாவை கைப்பற்றினால் ஜெர்மன் உலகின் மிகப்பெரும் வல்லரசு ஆகிவிடும் என்ற கனவில் ஹிட்லர் மிதந்து கொண்டிருந்தார். காரணம் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் ஒன்றிணையும் எல்லையாக இரஷ்ய நிலப்பரப்பு இருந்தது. மையப்பகுதிகளை கைப்பற்றுவது என்பது உலக அதிகாரத்தின் முக்கிய கூறாக இருந்தது. இன்றைய போர் முறை ஒரு நாட்டின் தலைநகர் கைப்பற்றப்பட்டால் அந்நாட்டை பிடித்து விட்டதாக பொருள் கொள்கிறது. அதன் மூலம் அது தன்னை பேரரசாக காட்டிக்கொள்கிறது. மேலும்  மேற்கத்திய புவி அரசியல் சிந்தனையாளரான மெகிந்தர் இவ்வாறு குறிப்பிட்டார். " யார் கிழக்கு ஐரோப்பாவை ஆள்கிறார்களோ அவர்கள் முக்கிய நிலப்பகுதிக்கு கட்டளை இடுகின்றனர். யார் முக்கிய நிலப்பகுதியை ஆள்கிறார்களோ அவர்கள் உலக தீவிற்கு கட்டளை இடுகின்றனர். யார்  உலகை தீவை ஆள்கிறார்களோ அவர்கள் உலகிற்கு கட்டளை இடுகின்றனர்.
வரலாற்றின் நகர்வில் இது நிதர்சனமாகி இருக்கிறது. ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்த யுரேசியா, யுரோசைபீரியா, ஆசியா மைனர் , ஆசியா பசிபிக் போன்ற பிராந்தியங்கள் மேற்கண்ட கோட்பாட்டிற்கு சரியாக பொருந்தி வருகின்றன. முதல் உலகப்போரில் பிரிட்டனும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியும், மூன்றாம் உலகத்தில் அமெரிக்காவும் முக்கிய பிராந்தியங்களை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தின. மேலும் ஆளுகைக்கு உட்படுத்த பல எத்தனிப்புகளை செய்தன. வல்லரசு கோட்பாட்டின் இலக்கணமே இது தான். இன்றைய உலக வல்லரசான  அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அதன் மிகப்பெரும் பலமே அது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் மகா சமுத்திரங்களை தன் இருபக்க அரணாகக்கொண்டிருப்பது தான். இதன் காரணமாக எந்த நாடும் அதனுள் நுழைவது எளிதான காரியமல்ல. புவி அரசியலில் சமுத்திர அரண்களும் மிக முக்கியமானவை. சமுத்திரங்களை, கடல்களை நீட்டிக்கொண்டு அதனுள் நீண்ட தூரம் பயணம் செய்து  தன் எல்லையை கண்டறிதலும் ஒரு புவி அரசியல் நடவடிக்கை தான்.

புவியியல் உண்மைகள் பல முறை உலகை மாற்றி இருக்கின்றன. பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் கடந்து வந்தால் இதை உணர முடியும். உலகப்போர்களும் அதன் பிந்தைய விளைவுகளும் ஜனநாயக சமூகத்தில் புவி அரசியல் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி இருக்கின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் புவி அரசியல் நலன்கள் இந்தியா மீது அதிகரித்தன.  அந்த தருணம் இந்திய பிரிவினை குறித்து அதிக விவாதங்கள் நடைபெற்ற தருணம். மத அடிப்படையில் இந்தியா -பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கின் கோரிக்கை. ஆனால் அதற்கு எதிராக இந்தியாவில் பலர் குரல் கொடுத்தனர். இந்த பிரிவினை சாத்தியமற்றது என்றனர். இந்நிலையில் பிரிவினையின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும்  புவி அரசியல் அடிப்படையில் பிரிந்து கிடந்தார்கள். தேசிய வாதிகள் இந்த பிரிவினை இந்தியாவை பலவீனப்படுத்தும் என்றார்கள். மேலும் சில ஏகாதிபத்திய எழுத்தாளர்கள் பாகிஸ்தான் பிரிவினை என்பது வருங்காலத்தில் சோவியத் யூனியனுடன் போர் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றனர். மேலும் புவி அரசியல் என்பது ஓர் அரசின் அல்லது பிரதேசத்தின் பொருளாதார , இராணுவ, இராணுவ உதவி மற்றும் ஆயுத தளவாடங்கள் ஆகியவற்றின் நீண்ட கால நலன்களை உள்ளடக்கி இருக்கிறது. ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கை தயாரிப்பில் இந்த புவி அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போதைய உலகம் ஏகாதிபத்தியமாக மாறி இருக்கும் நிலையில் புவி அரசியல் இந்த ஏகாதிபத்திய உருவாக்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதன் ராஜ தந்திர நடவடிக்கையின் முக்கிய பகுதியாக பேரரசு கருத்தாக்கம் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் உருவான பாசிசம் , நாசிசம், ஜப்பானியம் ஆகிய சொல்லாடல்கள்  இந்த பேரரசு உருவாக்கத்திற்கு துணையாக இருந்தன. பெரும் காலனிய அதிகார மையங்களின் எண்ணம் என்பது பேரரசை அதன் இயல்பான பகுதியாக நிலைகொள்ள செய்வது தான்.  இதற்கெதிரான போராட்டங்கள் காலனிய எதிர்ப்பாக, தேசியமாக உலகின் பல பகுதிகளில் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க தூரக்கிழக்கு நாடுகளுக்கு சுதந்திரமளித்தது, பிலிப்பைன் மக்கள் ஜப்பானின் தென் கடல் பிரதேசம் மீதான  ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடினர். இந்நிலையில் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் பலவாறாக இருந்தன. மூலப்பொருட்கள் மீதான ஆசை, உற்பத்திப்பொருட்களுக்கான  சந்தை, மிதமிஞ்சிய மக்கள் தொகையை கவரும் சிறு நிறுவனங்கள், உலகை ஆள்வதற்கான உத்திகள் , மனித சமூகத்தின் கண்கள் மீதான கௌரவம் மற்றும் பொருளாதார தன்னிறைவு போன்றவை இதனுள் அடங்கும். இருபதாம் நூற்றாண்டு உலக வரைபடத்தை எடுத்துக்கொண்டால் அதன் தொடக்க காலங்களில் பிரிட்டன் 140 நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. நெதர்லாந்து 60 நாடுகளை வைத்திருந்தது. முதல் உலகப்போருக்கு பின்னர் பிரான்சு 20 நாடுகளை அபகரித்தது. இத்தாலி எதியோப்பியா மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளை தன்வசப்படுத்தியது. இதன் தொடர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டு காலனிய உலகம் முந்தைய நூற்றாண்டை விட தன் பரப்பை குறைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்தின் இந்த ஒட்டுமொத்த விளைவானது அரசியல், பொருளாதார மற்றும் கலாசார அடிமைகளாக காலனிய நாடுகளை மாற்றியது. அவர்களின் நாகரீகங்கள் எதுவானாலும் அதனை முழுமுற்றாக மாற்றத்தொடங்கியது.

வரலாற்றோடு புவி அரசியல் அதிகம் தொடர்பு கொண்டது. சில புவி அரசியலாளர்கள் செயல்பாட்டில் வரலாற்றை புவியியலாக பார்க்கின்றனர். காலத்தின் ஒவ்வொரு நிகழ்வும் புவியோடு நகர்கிறது. பூகம்பம், புயல்மழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர் என்பது பூமியோடும், இயற்கையோடும் தொடர்பு கொண்டது. மாறிவரும் பருவகாலங்களும் பூமியோடும் தொடர்புடையது தான். ஆக ஒவ்வொரு காலநிகழ்வும் பூமியிலிருந்து பிரித்து பார்க்க இயலாத ஒன்று தான். கிழக்கின் வரலாற்றில் புகழ்பெற்ற நதிகளான நைல், யூப்ரடீஸ் மற்றும் டைகிரீஸ் நதிக்கரைகள் நாகரீகங்களின் பிறப்பிடமாகி ஒவ்வொரு இன அரசுகளும் அதனை வெவ்வேறு காலகட்டங்களில் படையெடுத்து வென்றிருக்கின்றன. அவ்வகையில் அசிரியர்கள், சுமேரியர்கள், மெசிடோனியர்கள் மற்றும் மங்கோலியர்கள் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். அமெரிக்காவை பொறுத்தவரை அதன் கால நகர்வில் ஏராளமான இராணுவ செயல்திட்டங்கள் எல்லாம் புவியியலுக்கும், வரலாற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டன. வரலாற்றின் கூறுகள் என்பவை மனிதன், இடம் மற்றும் காலம். அதே நேரத்தில் புவி அரசியல் கூறுகள் பூமி மற்றும் அரசு. இந்நிலையில் தற்போதைய புவி அரசியல் விளக்கம் என்பது கடந்த கால வரலாறு அடிப்படையிலானது. அதே நேரத்தில் புவி அரசியலின் எதிர்கால விளக்கம் என்பது தற்போதைய நிலைமைகள் அடிப்படையிலானது. தற்போதைய உலகம் சந்தித்து வரும் நெருக்கடிகள் அதன் முரண்கள், பல்வேறு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள், தேசிய இனப்போராட்டங்கள், பிறமோதல்கள், தொடரும் வறுமை இவை எதிர்கால புவி அரசியலின் விளக்கத்தை மாற்ற வாய்ப்பிருக்கிறது. மேலும் அரசு (state)என்ற சொல்லாடல் புவி அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருதுகோள் என்பது சுயாட்சி கொண்ட தேசங்கள் அதனை ஆள்வதற்கான இறையாண்மையை பெற்று விளங்குவது. சர்வதேச உறவுகள் என்பவை பூமியின் இறையாண்மையை அடிப்படையாக வைத்து அதனடிப்படையில் எழும் தொடர்புகளின் தொடர்ச்சி தான்.  ஆக மிகப்பெரும் உலக அதிகாரம் என்பது அரசுகள் அதன் தேசியக்கொள்கையை தன் வல்லமையால் உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் திறனே. அதனடிப்படையில் தான் தற்போது அமெரிக்கா செயல்படுகிறது.

புவி அரசியல் இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காஷ்மீர், பாகிஸ்தான், வங்கதேசம், சீனா மற்றும் இலங்கை ஆகியவை அதன் புவி அரசியல் கோட்பாட்டிற்குள் வருகின்றன. பன்முக சமூக கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் சிறுபான்மை  - பெரும்பான்மை மோதல்கள், சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சுயநிர்ணய போராட்டங்கள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறது. மேலும் புவி அரசியல் அமைப்பில் பெரும் அடர்த்தியான மக்களை கொண்ட பிரதேசமாக இருக்கிறது. மேலும் இந்தியா என்பது முழு இறையாண்மை மிக்க பிரதேசமா? தேசம் என்ற அரசியல் சொல்லாடலை கொண்ட ஒன்றா? அல்லது துணைக்கண்டமாக என்பது போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. மேற்கத்திய ஊடகங்கள் பல இந்தியாவை துணைக்கண்டம் என்றே குறிப்பிடுகின்றன. இந்நிலையில் துணைக்கண்டம் (Sub continent)என்பது  குறிப்பிட்ட பகுதிகள் அடங்கிய சுயமான நிலத்தொகுதியை குறிப்பதாகும்.  இந்நிலையில் இந்தியா ஆசியா கண்டத்திலிருந்து  வேறுபட்ட நில அமைப்பு மற்றும் அரசியல் சுதந்திரத்தை பெற்றிருக்கிறது. இதில் தெற்காசியா என்ற சொல்லாடல் துணைக்கண்டம் என்பதற்கு பதிலாக சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தனித்த புவி அரசியல் பிரதேசமாக பனிப்போர் காலகட்டத்தில் நடுநிலை வகித்த ஒன்றாக இருக்கிறது. இதன் சுயமான பொருளாதாரம், கலாசாரம், திரளான மக்கள் போன்றவை இதற்கான பலமாக இருக்கின்றன. இந்நிலையில் இந்திய பெருங்கடலும் இதன் அரணே. இவ்வாறான அரண்கள் உலகில் பல பிரதேசங்களில் இருக்கின்றன. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனம், எகிப்தின் சூயஸ் கால்வாய், ஆங்கில கால்வாய் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில்  இந்திய பெருங்கடல் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல நாடுகள் போட்டி இடுகின்றன. சீனாவும் அவற்றின் ஒன்று. இந்திய பெருங்கடல் இந்திய புவி அரசியலின் முக்கிய பகுதியாக இருக்கும் நிலையில் இலங்கையை இந்தியா கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். இந்தியாவை மீறி இலங்கையால் எதுவும் செய்ய இயலாது. மேலும் இந்த அரணில் இந்தியாவை தாண்டி வேறு எந்த ஆசிய நாடுகளும் வந்து விட முடியாது. ஆக தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு காத்திரமான பங்கை ஆற்ற முடியும். புவி அரசியல் என்பதை மறைத்து விட்டு சீனாவை இலங்கையில் அதனால் முன்னிறுத்த முடியாது. சீனா என்பது இலங்கையின் புவி அரசியலோடு சம்பந்தப்படாதது. ஆக தன் நிலவியலால், வலிமைமிக்க அரசால் இந்தியா இலங்கையை கட்டுப்படுத்த முடியும். இலங்கையின் அரசியல் நகர்வில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடியும். அவ்வகையில் இலங்கையை கூறாக்குவதற்கும் இந்தியாவால் முடியும்.  நவீன புவி அரசியல் என்பது இவ்வாறு தான் நாடுகளை அளந்து வைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியில் புவி அரசியல் என்பது ஒரு இயங்கியல் ஆய்வு முறை. உலகை தொடர்ந்து அவதானித்தலில் உருவாகும் கோட்பாடு. இதனிலிருந்தே சர்வதேச உறவுகளும், தேசங்களும், சுய நிர்ணயமும் உருவாகின்றது.


Monday, March 10, 2014

பாராளுமன்ற ஜனநாயகமும் இந்தியாவும்



ஜனநாயகம் என்ற சொல்லாடல் ஒரு நாட்டில் அல்லது தேசிய இனத்தில் மக்களை குறிப்பதாகும். மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தங்களை ஆள்வதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் அந்த பிரதிநிதிகள் மக்களை ஆள்கிறார்கள். ஒருவகையில் இது சுய ஆளுகை தான். இது குறிப்பிட்ட கால அளவில் மாறுபடுகிறது. மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தை அதிகார வர்க்கம் ஜனநாயக வடிவத்தில் ஆளுகை செலுத்துவது. மேலும் அதிகாரவர்க்கமும், சட்டமியற்றும் சபையும் பின்னிபிணைந்திருக்கிறது. பாராளுமன்ற முறையில் அதிகாரவர்க்க தலைமை என்பது அரசாங்க தலைமையிலிருந்து வித்தியாசப்பட்டது. இது அதிபர் முறைக்கு மாறுபட்டது.  பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் சட்டம் மைய அதிகாரத்தை கொண்டது. இதில் அரசாங்க தலைமை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை அடிப்படையில் ஆளும் வர்க்கம் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசாங்க தலைமை என்பது அதிகார வர்க்க தலைமையே. இவை சட்டமியற்று சபைக்கு அல்லது பாராளுமன்றத்தின் கேள்விக்கு உட்பட்டது. அதற்கு பதில் சொல்லும் கடமை இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது.

பிரதமர் பதவியை உட் கொண்ட பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின்   தொடக்கம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனாகும். கி.பி 1714 ல் ஜெர்மானிய இளவரசர் ஜார்ஜ் லுத்விக் பிரிட்டானிய மன்னரை தூக்கி எறிய ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அரசர் முதலாம் ஜார்ஜ் கேபினட்டிற்கு தலைமை வகித்தது மட்டுமல்லாமல் அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்தார். தொடக்கத்தில் அவர் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவில்லை. இதனால் மூத்த அமைச்சருக்கு பொறுப்புகளை அளித்தார். அவரின் ஆட்சிகாலத்தில் பாராளுமன்றம் அரசை கட்டுப்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை செலுத்தியது. அதன் பிந்தைய கட்டத்தில் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கான தேவை அதிகரித்தது. இந்த தேவையானது மக்களிடமிருந்து எழுந்தது. இந்நிலையில் அவரின் ஆட்சி முடிவு காலத்தில் ராபர்ட் வால்போல் பாராளுமன்ற ஜனநாயக அடிப்படையிலான முதல் பிரதமராக பதவியேற்றார். மேலும் பாராளுமன்றம் மற்றும் பிரபுக்கள் சபை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அதே காலத்தில் ஸ்வீடனிலும் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிற காலனி நாடுகளில்  பாராளுமன்ற ஜனநாயக முறை ஏற்பட காரணமாக அமைந்தது.



இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் நிர்ணய சபையானது பிரிட்டன் பாராளுமன்ற வடிவத்தை சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. அதே பாராளுமன்றம், அதே அரசு , அதே நிர்வாக அமைப்பு முறையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதனை ஒட்டிய அரசியல் சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ல் இந்த பணி நிறைவுற்றது.  பின்னர் 1952 ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாக்காளர்கள் எழுதபடிக்க தெரியாதவர்களாக இருந்ததால்  சின்னம் முறை அமல்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்பட்டு அந்த கட்சியின் வேட்பாளர் பெயருக்கு நேரே அந்த சின்னம் பொறிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளரின் கட்சி சின்னத்தின் மேலே அல்லது பெயரின் மேலே ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முத்திரை இட வேண்டும். அதிக ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவர். இப்படியாக ஒவ்வொரு தொகுதியிலும் அதிக இடத்தை பெற்ற கட்சிகள் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு ஆட்சியமைக்க அழைக்கப்படுகின்றன. பின்னர் இந்த ஆட்சியின் மீது உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். அதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் அந்த ஆட்சி நீடிக்கவோ அல்லது கவிழவோ செய்யும். உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் பலம் என்பது மக்கள் தான். காரணம் ஐந்து ஆண்டுகளில் ஓர் ஆட்சியை பிடிக்காவிட்டால் அவர்களால் தூக்கி எறியமுடியும். இங்கு சர்வாதிகார நிலைக்கு இடமில்லை. 1975 ல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது கடும் அதிருப்தியுற்ற மக்கள் அடுத்த தேர்தலில் அவரை தோற்கடித்தார்கள். பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் பலத்தில் இதுவும் ஒன்று.

 இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் இந்த முறையானது அரசியல் சட்ட உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே விமர்சனத்திற்குள்ளானது. அதனை வடிவமைத்த அம்பேத்கார் இந்த முறை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பலனையும் அளிக்காது என்று குறிப்பிட்டார். அவர் அவ்வாறு குறிப்பிட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் தற்போதைய தேர்தல் முறை பெரும் பலவீனமாகவே இருக்கிறது. ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்டிருக்கும் கட்சிகள் இந்த பெரும்பான்மை ஓட்டு என்ற முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. காரணம் தற்போதைய தேர்தல் முறைப்படி ஒரு  வேட்பாளர் கூடுதலாக ஒரு ஓட்டு பெற்றாலும் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இப்படி ஒரு மாநிலம் முழுவதும் நடக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஒரு மாநிலத்தில் 10 சதவீத வாக்குவங்கி இருப்பதாக கணக்கில் கொண்டால் தற்போதைய பெரும்பான்மை முறையின் படி அவருக்கு குறைந்த பட்சம் ஒரு பிரதிநிதி கூட இல்லாமல் போகலாம். காரணம் பல இடங்களில் அந்த கட்சி குறைந்த வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கும். ஆனால் இந்த முறையை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவம் வரும் போது ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர்க்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அந்த கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த முறைப்படி ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி பெற்ற மொத்த ஓட்டுக்களின் அடிப்படையில் பதிவான வாக்குகளின் சதவீதம் கணக்கில் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பிரதிநிதித்துவம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் தற்போதைய தேர்தல் முறையில் கட்சிகளே பணத்தை வாரி இறைக்கின்றன. சில சமயம் பண பலம் உள்ள வேட்பாளர் வெற்றி பெறுகிறார். தேர்தலை சிறந்த முதலீடாக கருதும் அவர் குறிப்பிட்ட ஐந்தாண்டுகளில் அதனை இரட்டிப்பாக திருப்பி எடுத்துக்கொள்கிறார். இதுவும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதனை மாற்றி அரசே தேர்தல் செலவினங்களை எடுத்துக்கொண்டால் இது பெருமளவில் குறையும். ஊழலையும் ஓரளவு குறைக்க முடியும். ஆக இன்றைய இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் வலுவானதாக இருக்கும் அதே சமயத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. மேற்கண்ட சீர்திருத்தங்கள் நிகழும் போது இந்த நூற்றாண்டில் இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய முயல வேண்டும்.



Monday, March 3, 2014

சிறுபான்மை என்னும் அடையாள அரசியல்




சிறுபான்மை (minority)என்ற சொல்லாடல் ஒரு தேசத்தில் அல்லது பிராந்தியத்தில் வசிக்கும்,  குறைந்த அளவில் திரட்சி உடைய ஓர் இனக்குழு தொகுதியை அல்லது குறிப்பிட்ட அடையாளம் சார்ந்த மக்களை குறிப்பதாகும். இந்த அடையாள அரசியல் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. இதன் பரிணாம வளர்ச்சியை ஆராய்வது அவசியமாகும்.

உலகில் இனக்குழுக்கள் பரிணாமம் அடைந்த காலம் முதல் இந்த சிறுபான்மை அடையாளமும் சேர்ந்து வந்திருக்கிறது. இனக்குழு சமூக நிலையில் அது எண்ணிக்கை மற்றும் உடல்ரீதியான பலம் ஆகியவற்றைக்கொண்டு  மதிப்பிடப்பட்டது. தங்களுக்குள் பல்வேறு காரணங்களுக்காக முரண்பட்டு சண்டையிட்டுக்கொண்ட இனக்குழுக்கள் மாறி மாறி தங்களை அழிக்கத்தொடங்கின. இந்த அழித்தல் அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையிலும் தொடர்ந்தது. இந்த இனக்குழு பரிணாமம் உலகம் முழுக்கவே வியாபித்திருக்கிறது. இந்தியாவில் இம்மாதிரியான இனக்குழுக்கள் பரிணாமம் அடைந்த நிலை தான் சாதிகளின் தோற்றம். சாதியம் இந்திய இனக்குழு சமூக கட்டமைப்பின் பரிணாமமே. இன்றைய இந்தியாவில் பல்லாயிரம் சாதிகள், உட்சாதிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சாதிகள் குறிப்பிட்ட பகுதியை, பிரதேசத்தை உள்ளடக்கியவை. அவற்றை தாண்டி வேறெங்கும் நாம் அந்த சாதிகளை பார்க்க முடியாது. நிறங்களோடு இணைந்த இனக்குழு கட்டமைப்பைக் கொண்ட ஆப்ரிக்காவில் கருப்பு நிறத்தோலை உடைய கருப்பர்கள் தங்களை தனி அடையாளமாக காண்கின்றனர். இந்த அடையாளம் அவர்களை வெள்ளைத்தோல் வர்க்கத்திடம் இருந்து காலங்காலமாக விலக்கி வைத்தது. கருப்புத்தோலை கொண்ட இனம் தான் உலகின் ஆதி இனம் என அறியப்படுகிறது. இந்த விலக்கல் முறை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்க வேண்டும்.

வரலாற்றில் இனக்குழு மோதல்கள் எப்போதும் நடைபெற்று வந்திருக்கின்றன. இது அரசு உருவாகிய காலத்தில் அரசுகளின் மோதலாக வெளிப்பட்டது. குறுநில மன்னர்கள் மற்றும் நிலபிரபுக்கள் மோதிக்கொண்டார்கள். அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இம்மாதிரியான சமூக சூழலில் எண்ணிக்கை என்பதை விட பலமே பெரும்பான்மை என்பதை தீர்மானித்தது. நிலபிரபுத்துவத்தின் ஒடுக்குமுறை என்பது பலத்தின் அடிப்படையில் தான். அடிமை சமூகம்  என்பது இதன் தொடர்ச்சி தான். பல நூற்றாண்டு காலமாக ஐரோப்பாவில் நடந்த விவசாய போராட்டங்கள் இனங்களிடையே பலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தன. இதனடிப்படையில் காலப்போக்கில் இனங்களிடையே இயக்கவியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இன அழிப்பு பரவலானது. பலம் பொருந்திய ரோமானிய அரசை கூட பலவீனமான ஜெர்மானியர்கள் வென்றனர். இந்தியாவில் ஆரிய- திராவிட முரண்கள் வழக்கில் இருந்தன.

இந்தியாவை பொறுத்தவரை யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பார்சி ஆகிய மதங்கள் உள்நுழைந்தவை ஆகும். இவை எல்லாம் குறிப்பிட்ட நூற்றாண்டுகளில் இந்திய சாதிய சமூகங்களிடையே பெருந்தாக்கம் செலுத்தின. இதனிடையே சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை இந்தியாவில் வைதீக சமயத்தவரால் அழிக்கப்பட்டன. பெருஞ் சமயங்களான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டன. இந்த முரண்பாட்டில், மோதல்களில் தங்களுக்கான சரியான வேர்களை, அடையாளங்களை தேட விரும்பிய நாட்டார் மரபினர் தங்களை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தோடு இணைத்துக்கொண்டனர். இந்தியாவில் கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகியவை பரவியதன் அடிப்படை வரலாறு இது தான். மேலும் ஆட்சியாளர்களின் மதம் எதுவென்று கண்டறிந்து அதனடிப்படையில் தங்களை அம்மதத்தோடு அடையாளப்படுத்திக்கொண்ட, தழுவிக்கொண்ட சமூக போக்கும் இந்தியாவில் இருந்தது. இந்தியாவில் சிதறிக்கிடந்த, பரவலாக இருந்த சாதிகளிடையே இந்த போக்கு அதிகமாக காணப்பட்டது. மேலும் சாதிய சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் தங்களை மண் மற்றும் பிறப்பு சார்ந்த கறைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.  இது பிரிட்டிஷார் காலம் வரை தொடர்ந்தது.


பிரிட்டிஷ் காலனிய ஆட்சிமுறை வெறும் ஆட்சியாக மட்டுமே இருக்கவில்லை. அது சமூக சீர்திருத்தமாக, சமூக முரண்களை Fine tuning செய்யும் ஒன்றாகவும் இருந்தது. குறிப்பாக சிதறிக்கிடந்த சாதிய வழிபாட்டு மக்களை ஒன்றிணைத்து இந்து என்ற ஒரே அடையாளத்தை கொடுத்தது. அது வரை செமிடிக் மதங்களை பின்பற்றிய மக்கள் வேலியற்று இருந்த போதும், அவர்களுக்குள் வேலிகளை ஏற்படுத்தி, முற்றிலுமான தீவுக்கூட்டத்தை உருவாக்கியது. இவை அனைத்தும் பிரிட்டனின் காலனியாதிக்க நுண்ணரசியல். ராஜாராம் மோகன்ராய் , தயானந்த சரஸ்வதி போன்றவர்களின் சீர்திருத்த இயக்கம், மத ஒருங்கிணைப்பு இயக்கம் இவற்றின் தொடர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வீரசாவர்க்கர் முதன்முதலாக இந்துத்துவத்தை முன்வைக்கிறார். இதன் பின்னர் இந்து - முஸ்லிம் அடையாள பிளவும், சமூகப்பிளவும் உயிர்பெறத்தொடங்கியது. இதன் தொடர்ச்சியில் சமூக காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத்தியில் நாங்கள் ஆண்ட பரம்பரை என்ற சிந்தனை வலுப்பெற்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையும் எழுந்தது.
இந்திய சுதந்திரத்தின் பிரிவினை தருணம் மிக அகோரமானது. மிகப்பெரும் வரலாற்றுக்கறை. இருதரப்பிலும் நடந்த வன்முறைகளால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சகணக்கில் மக்கள் அங்கும் இங்குமாக புலம்பெயர்ந்தனர். இன்னும் உருவாகாத ஒரு நாட்டிற்காக தேசிய இன சுய நிர்ணயத்தை தாண்டி வெறும் மத அடிப்படையில் இந்தியா பிளவுபட்டது. வடக்கிலும், தெற்கிலும் எஞ்சியிருந்த  முஸ்லிம் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாறினர். இதன் பின்னரும் இரு தரப்பிலும் உராய்வுகள் அதிகப்பட்டன. வகுப்புவாத சிந்தனையைக்கொண்ட இந்துத்துவ சக்திகள் தற்போது பெரும்பான்மை அடையாளத்தை வைத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வகுப்பு உணர்வை தூண்டும் விதத்தில் பலமுறை நட்ந்து கொண்டன. குஜராத் கலவரம் அதற்கு பெரும் சான்று.

ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில்  வாழும் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் துயரங்களை, வலிகளை, ஒடுக்குமுறைகளை அவர்களின் பக்கமாக நின்று அதை பிரதிபலிப்பது என்பது ஜனநாயக , முற்போக்கு சக்திகளின் கடமை. அதன் முற்போக்குத்தன்மையான, புரட்சிகரமான சிந்தனை முறை என்பது சிறுபான்மையினர் ஆதரவு அரசியலாக தான் இருக்க முடியும். இதன் அடிப்படையில் இந்தியாவில் பிரச்சினைகளின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் பக்கம் நிற்கும் இடதுசாரிகள் மற்றும் பிற மத சார்பற்ற அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து மற்றும் பௌத்தர்கள் பக்கம் நிற்கின்றனர். இது ஒருவகையில் புவி அரசியல் கூட. இந்த வகைமாதிரிக்குள் நின்று கொண்டு தான் இந்தியாவில் நாம் சிறுபான்மை அரசிய்லையும், அதன் விவகாரங்களையும் கவனிக்க வேண்டும்.