காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, January 31, 2010

இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்

பிரஞ்சுப் பத்திரிக்கையான ’லெ மோந்தே’, இஸ்லாமிய உலகிம் பற்றிய அபரிமிதமான புலமை பெற்றவர் என்று பாராட்டப்பெற்ற பெருமைக்குரியவர் மாக்ஸிம் ரோடின்சன். கடந்த 2004-ம் ஆண்டு தனது 89ம் வயதில் மறைந்துபோன ரோடின்சன் அரபு மற்றும் இஸ்லாமிய சரித்திரம், நாகரீகம் ஆகியவை குறித்த பல பிரசித்தி பெற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் 1961ம் ஆண்டு எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம் எனும் புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் இவர் 1966-ல் எழுதிய மாக்ஸ் வெப்பரின் புகழ்வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எதிரொலியாய் எழுதப்பட்ட ’இஸ்லாமும் முதலாளித்துவம்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச்சமீபத்தில் இவரது ‘மெமாயர்ஸ்’ புத்தகமாய் வெளியிடப்பட்டது. அப்புத்தகம் பிரஞ்சு நாட்டின் தலை சிறந்த எழுத்தாளரான ரோடின்சன் தனது பாரிஸ் நகர வாழ்வினை வாழ்வை மீள்பார்வையினைப் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை முதலாளித்துவத்தின் போக்கில் பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகம் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சி கட்டத்தின் தோற்றத்தை பின் தொடர்ந்து உருவானது. அதற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெரும் சமூக மாறுதலை ஏற்படுத்தியது. அது வெளிப்படையான மாற்றமாக இல்லாவிட்டாலும் சமூக குழுக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவதில் பெருவாரியான பங்கை வகித்தது. இதில் ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு பெரும் கண்டங்கள் சார்ந்த முரண்பாடுகள் முக்கியமானவை. உற்பத்தி முறை மற்றும் சமூக உற்பத்தி முறை ஆகிய கருத்தாக்கங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பொருளாதார, சமூக மாறுதல் உலகின் பெருமதங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இஸ்லாமிய சமூக அமைப்பின் மீது தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? இஸ்லாம் அதனளவில் முதலாளித்துவ கூறுகளை கொண்டதா? என்பதான கேள்விகள் ஓரியண்டல் சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்தன. இதனைக்குறித்து மாக்சிம் ராடின்சன் விரிவாக ஆராய்ந்தார். அதற்காகவே அவரிடம் இருந்து Islam and Capitalism என்ற நூல் வெளியானது. முதலாளித்துவ சமூகம் மத்தியகிழக்கு அரபு சமூகத்தில் எத்தகைய மாறுதலை ஏற்படுத்தியது? அதன் வீச்சு பிற சமூக அமைப்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்கியது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மாக்சிம் ராடின்சன் விடைகாண முயற்சித்தார். புதிர்பாதைகள் நிறைந்த கிழக்கத்திய சமூக அமைப்பில் இது குறித்த ஆய்வுமுறை சிக்கலானதாகும். சிக்கலான மலைப்பாதைகள் போன்று இதன் வழிகளும் சிரமமானவை. எந்த ஆய்வாளராலும் திடீர் முன்முடிவுக்கு வர முடியாதவை. ராடின்சன் இதன் புதிர்களை அவிழ்க்க முயன்றார். அதன் கோடுகள் சார்ந்த பாதைக்குள் பயணம் செய்தார்.
மாக்சிம் ராடின்சன் தன் இஸ்லாம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய ஆய்வை வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து தொடங்கினார். வளர்ச்சியடைந்த தொழில்வள நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய வறுமையும், பசியும் ஒன்று சேர்ந்து நிரம்பிய நாடுகள் இவற்றின் போராட்டமாகவே உலகம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே உலகின் முக்கிய பிரச்சினையாக வலைகிறது. இவ்வாறான வளர்ச்சி குன்றிய நாடுகளின் பின்தங்கிய மனிதவளம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் செழுமையான மனித வளம் இவை இரண்டின் இயக்கம் பற்றிய எதார்த்தம் உலகிற்கு மிக முக்கியம். இந்த எதார்த்தம் அரபு நாடுகளை சமூக கட்டுமானத்திற்குள் பிரதிபலிக்க செய்கிறது. இதன் நீட்சியில் சில நூற்றாண்டுகளாகவே உலக அரங்கில் முஸ்லிம் மதத்தின் அங்கதம் குறித்து அதிகம் ஆராய வேண்டியதிருக்கிறது என்றார் ராடின்சன். இதை சார்ந்த நாடுகளில் சில முக்கிய கருத்துருக்களின் வீச்சு குறித்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை, சோசலிசம், முதலாளித்துவம், தேசியம், இஸ்லாம் போன்ற வித்தியாச கருத்துருக்கள் எவ்வாறு உறவுகொள்கின்றன என்பதும் முக்கியம். அரசியல் இதன் பின்னணியில் இயங்குகிறது. அரசியல் உடனடியான, நடைமுறை சார்ந்த கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வி தெளிவானதும் அதற்கான பதிலை சமீபத்தில் வைத்திருப்பதுமாகும். ஆட்சியாளார்களின் செயல்பாடு, மற்றும் அரசியலாளர்கள் இதன் பதிலுக்கு ஏற்ற செயல்முறைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறார்கள். அரசியல் செயல்பாடு, பொருளாதார செயல்பாடு, கருத்தியல் மற்றும் கலாசார மரபு இவற்றிற்கிடையேயான இணைப்பு மற்றும் சரியான உறவு முறை என்பது என்ன? இதற்கான முன்முடிவுகள் சாத்தியமானவை. மத்திய கிழக்கின் வரலாற்றிலிருந்து எளிதில் பெற முடிந்தவை. முதலாளித்துவம் இந்த நாடுகளுக்கு உவப்பான கருத்தாக்கமா? என்பது குறித்த விவாதம் ஓரியண்டல் மற்றும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ கருத்தாக்கம் மத்திய கிழக்கு அரபுலகில் அதன் ஐரோப்பிய வருகைக்கு பிற்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அறிமுகமானது. அங்குள்ள பெரும் நிலபரப்புகள் மற்றும் தொழில்வளங்கள் எல்லாம் தனிநபர்களுக்கு சொந்தமாயின. பூர்வீக நாடோடி பழங்குடிகள் தங்களின் பாரம்பரியத்தை இழந்தார்கள். முதலாளித்துவம் மற்றும் இஸ்லாம் குறித்த ஒப்பீடு முஸ்லிம் சிந்தனையாளர்கள், பொருளியலாளர்கள், மற்றும் வரலாற்றாளர்களால் ஐரோப்பாவில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர்கள் எல்லோருமே ஒரு அர்த்தத்தில் தர்க்கத்தின் அடிப்படையை மறந்து விடுகிறார்கள் என்கிறார் ராடின்சன். முஸ்லிம்களின் மத மரபு மற்றும் தேசிய வாதம் அல்லது இரண்டும் எப்போதுமே நவீன பொருளாதார முறைமைகளுக்கு எதிராக இருந்ததில்லை. இன்னொரு வகையில் இந்த மரபு பொருளாதார மற்றும் சமூக நீதிக்கு சாதகமானதாகவே இருக்கிறது. இஸ்லாம் குறித்த அனுதாபம் கொண்ட ஐரோப்பிய சிந்தனையாளர்கள் சிலர் மேற்கண்ட கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.முதலாளித்துவம் என்ற சொல்லாடலை பற்றி வித்தியாசமான கருதுகோள்கள் இருக்கின்றன. இவை விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வகையில் இது தனித்த சில பொருளாதார நிறுவனங்களை குறிக்கிறது. மேலும் இந்த நிறுவனங்களின் சட்டகத்தில் இயங்கும் அரசமைப்பையும், அதன் மனோபாவத்தையும் குறிக்கும். இதனடிப்படையில் முதலாளித்துவ நிறுவனங்கள் சில தருணங்களில் மொத்த சமூக அமைப்பையும் தன் கூட்டிற்குள் இழுக்கும். ஆனால் அவை அந்த சமூகத்தில் சிறுபான்மையாகவே இருக்கும். உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை, தாராள வர்த்தகம், இலாபத்திற்கான எத்தனிப்பு, சந்தைக்கான உற்பத்தி, பணப்பொருளாதாரம், போட்டி செயல்முறை, வர்த்தக செயல்பாட்டில் அறிவின் நுட்பம் போன்ற கூறுகள் இவற்றை இயக்கும் சக்திகளாக இருக்கும். முதலாளித்துவத்தின் மற்றொரு அர்த்த வகைபாடு மொத்த சமூகத்தையும் குறிக்கும். அதன் நிறுவனங்கள் அல்லது மனோபாவம் இவற்றை அர்த்தப்படுத்தவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது மேற்கத்திய சமூகத்தையே அதிகம் குறிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த அமைப்பே உலகை முதலாளித்துவமாக பிரதிநிதித்துவம் செய்தது. இதில் ரோமப்பேரரசு முக்கிய பங்கு வகித்தது. முதலாளித்துவம் குறித்த வியாக்கியானங்கள் மார்க்சியர்களால் அதிகம் வெளிப்படுத்தப்பட்டன. இவர்களால் மட்டுமே இதன் தரவுகள் தெளிவாக முன் வைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிறுவனங்கள் பற்றியும், நவீன ஐரோப்பாவில் அது எவ்வாறு பரிணமித்தது என்பது பற்றியும் மார்க்சியர்களே அதிக அளவில் ஆராய்ந்தனர். ஆக முதலாளித்துவம் என்பது ஒரு வகையில் அதன் விரிந்த அர்த்தத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் உற்பத்தி முறையாக இருக்கிறது. அதன் உரிமையாளர் தன் உற்பத்தி பண்டங்களுக்கு கூலியை வழங்கி, இலாபத்தை திரட்டுகிறார். இது தொழிலக முதலாளித்துவம். மற்றொரு வகையில் குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார முறைமையும், அதன் இயங்குமுறையும் ஒன்றை ஒன்று ஊடுபாவுதன் வழி அதன் இயக்கம் நிலவுகிறது. இது புதிய பொருளாதார காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் முதலாளித்துவ வியாக்யானமாக இருந்தது. இறுதியாக முதலாளித்துவ "சமூக பொருளாதார அமைப்பு". இந்த அமைப்பே நாம் வாழும் வகைமையில் இருக்கிறது. நாம் ஒரு தனி மனிதனாகவும், அதே நேரத்தில் முதலாளித்துவ சமூக மனிதனாகவும் இருக்கிறோம். "நான் வாங்குகிறேன். அதனால் இருக்கிறேன்" என்ற ழீன் பூதிலாரின் மேற்கோள் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த வகைப்பாடு என்பது இடைக்கால ஐரோப்பாவின் வணிக மற்றும் நிதி மூலதனத்தின் எச்சமே. இந்த வடிவங்கள் இடைக்கால முஸ்லிம் உலகில் வழக்கில் இருந்தது என்கிறார் ரோடின்சன். ஐரோப்பாவில் முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு பரிணமித்த போது இஸ்லாம் அதன் சொந்த வெளிக்குள்ளும் இதை பிரதிபலித்தது. இஸ்லாமிய சமூக பொருளாதார அமைப்பை பற்றி ஆராயும் போது அதன் ஆரம்ப கட்டத்தில் வழக்கில் இருந்த லேவாதேவி முறை, (Money lending)வர்த்தக நடவடிக்கை ஆகியவற்றில் இருந்து தொடங்க வேண்டும். இஸ்லாமின் ஆரம்ப கட்டத்தில் மெக்கா நகர வர்த்தகர்கள் இடையே வட்டிக்கு பணம் கொடுத்தல் பிரதான தொழிலாக இருந்தது. இது பண்டமாற்று முறைமையிலும் வழக்கில் இருந்தது. வர்த்தக நடவடிக்கையில் மெக்கா நகரம் அரபுலகின் மையமாக திகழ்ந்தது. மார்க்ஸ் வணிக மூலதனத்தின் இருத்தலும் அதன் வளர்ச்சியும் குறிப்பிட்ட கட்டம் வரை அதன் சொந்த நிபந்தனையாக இருக்கிறது என்கிறார். இது பண்டைய அரபுலகிற்கு சரியாகவே பொருந்துகிறது. லேவாதேவி முறை வழக்கில் இருந்து குறிப்பிட்ட கட்டத்தில் அது தடை செய்யப்பட்டது. கடன் செயல்பாட்டில் இஸ்லாம் மதரீதியான கட்டளைகளை விதித்தது. அதை ஓர் ஒப்பந்தமாக்கியது. திருமணம் என்பது இஸ்லாமில் ஒப்பந்த நடவடிக்கையாக மாறியது இதன் தர்க்க தொடர்ச்சியே. நாணய முறை அடுத்த கட்டத்தை நோக்கி பரிணமித்தது. தினார், திர்ஹம், ரியால் என்பதாக பல வடிவங்களை எடுத்தது. இதன் தொடர்ச்சியில் பண வளத்தின் தர்க்க ஒழுங்கானது குறிப்பிட்ட வடிவத்தில் குவியமாகிறது. அதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறைமை காரணமாக இருக்கிறது. இதன் படி உற்பத்தி என்பது வணிகத்திற்காக நடைபெறுகிறது. விற்பனை பெரிய அளவில் இருக்கிறது. ஒரு வணிகர் பொருட்களை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதோடு திருப்தியடையமாட்டார். மாறாக தன் ஒரு கொள்முதலில் பல வாங்குபவர்கள் இருக்க வேண்டும் என்பதை தான் எதிர்பார்ப்பார். இன்னொரு அர்த்தத்தில் வணிக மூலதனத்தின் வளர்ச்சியானது தன் பரிமாற்ற மதிப்பிற்காக அதிக அளவில் உற்பத்தியை பெருக்குவதுடன், உற்பத்தி பொருட்களை அதே அளவில் பண்டமாக்கவும் செய்கிறது. ஆக முதலாளித்துவ வணிகம் மொத்தமாக இருக்கும் பட்சத்தில் பணத்தை சந்தைக்கான உற்பத்திக்கு பயன்படுத்துகிறது. இஸ்லாமின் ஆரம்ப கட்டம் உற்பத்திக்கானதாக இல்லாமல் வணிக பரிமாற்றமாக இருந்தது. வணிக செயல்பாடே மொத்த சமூகத்தின் பொருளாதார இயக்கத்தை தீர்மானித்தது. இதன் படி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ நிறுவனங்கள் இதனடிப்படையில் செய்யப்பட்ட மூலதன கணக்கீட்டின் படி இயங்குகின்றன. இந்த இயக்கமுறை இவ்வுலகில் நாகரீகமடைந்த எல்லா நாடுகளிலும் வழக்கில் இருந்தது. சீனா, இந்தியா, ஈராக்,எகிப்து மற்றும் சிரியா ஆகியவற்றில் இடைக்கட்டத்தில் வழக்கில் இருந்த இந்த முறைமையானது நவீனகாலகட்டத்திலும் தொடர்ந்தது. இஸ்லாமின் பொருளாதார கூறுகளில் கூலி உழைப்பு முக்கிய இடம் பெறுகிறது. இஸ்லாமிய பொருளாதார அடிப்படைக்கு குர் ஆனும் , நபியின் சொல், செயல் வழியும் மூலக்கூறாகும். குர் ஆனை பொறுத்தவரை கூலி உழைப்பு ஆட்சேபனையற்ற இயற்கை நிறுவனமாகும். கூலி உழைப்பை குர் ஆன் இறைவனோடு தொடர்புபடுத்தி பேசுகிறது. இன்னொரு இடத்தில் மோசஸ் பற்றிய தொன்மத்தோடும் கூலி உழைப்பை தொடர்புபடுத்துகிறது. மேலும் அக்காலகட்டத்தில் நிலவிய கந்து வட்டி முறையை கடுமையாக எதிர்த்தது. இங்கு ரிபா என்ற சொல் பெருக்கம் (increase)என்ற அர்த்தத்தில் குர் ஆன் பயன்படுத்துகிறது. இது தற்கால வட்டி என்பதை குறிக்கும் interest என்பதல்ல என்கிறார் ரோடின்சன். மாறாக பணம் இரட்டிப்பாவதை ரிபா குறிக்கும் என்கிறார். அக்காலத்தில் யூதர்கள் மற்றும் அரபு பழங்குடியினர் மத்தியில் இந்த வழக்கம் இருந்தது. அவர்களுடனான அரபுகளின் பொருளாதார முரண்பாடு இந்த வழக்கத்தை தடை செய்யும் அளவிற்கு சென்றது. தற்காலிக தடை முறையாக வந்த இந்த வழக்கம் பின்னர் லௌகீகமயமாகி விட்டது. ஆக இஸ்லாமிய சமூக, பொருளாதார கட்டமைப்பை குர் ஆனின் கட்டளை சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. மேலும் உற்பத்தி சாதனங்களின் உடைமை குறித்து இஸ்லாமிய அடிப்படைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை. கந்து வட்டி மற்றும் ஜகாத் என்ற வரி விதிப்பு மூலம் ஒருவனின் சொத்து என்பது இறைவனின் கண்காணிப்புக்குள்ளான ஒன்றாக இருக்கிறது. ஆக சொத்து என்பது குடும்பத்தின் பிரிக்கப்படாத வடிவமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அரசின் உடைமையாகவும் இருக்கும். சில முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான நிலப்பகுதிகள் ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது கிராமத்திற்கு சொந்தமான ஒன்றாக இருக்கின்றன. இவ்வாறாக சொத்துரிமை என்பது குறிப்பிட்ட கருதுகோள்கள் அடிப்படையில் லௌகீக வாழ்க்கையின் ஒவ்வொருவரின் உரிமையாக இருக்கிறது. இந்த உரிமை அதன் பொருளாதய இருப்பை தீர்மானிக்கிறது.முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை என்பது முஸ்லிம் நாடுகளில் தற்போதைய கட்டத்திற்கு முன்னர் வழக்கில் இருக்கவில்லை என்கிறார் ரோடின்சன். மாறாக முதலாளித்துவத்தின் வெற்று வர்த்தக அமைப்பு முறையின் மறு பிரதிபலிப்பாகவே முந்தைய அரபு சமூகம் இருந்திருக்கிறது. அன்றைய அரபு சமூகத்தில் மெக்கா நகரம் முதலாளித்துவ வர்த்தக மையமாக இருந்தது. அதன் பெரும்பாலான குடிமைகள் குறைஷி என்ற உயர் வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவர்கள் தங்களை வர்த்தகம் மற்றும் வட்டிக்கு கடன் வழி உயர்த்திக்கொண்டனர். மார்க்ஸ் இதனை அறிவார்ந்த வர்த்தக நடவடிக்கை என்றார். பண்டங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற நடவடிக்கையால் அவர்களின் மூலதனம் பெருகியது. அவர்களின் பெருக்கத்திற்கு மத ரீதியான நடைமுறைகளையோ அல்லது கோட்பாடுகளையோ துணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களின் இந்த பொருளாதார நடவடிக்கையை கார்ல் பொலைன் இழைக்கப்படாத பொருளாதாரம் (unembedded economy)என்றார். அதாவது முறைப்படியான பொருளாதார நிறுவனங்களை கட்டமைக்காமல் சமூகத்தின் பொருளாதார சூழலிலிருந்து வேறுபட்டு வெறும் இனக்குழு சார்ந்த பொருளாதார நடவடிக்கை தான் அது. இங்கு பண்டங்களின் தேவை மற்றும் அளிப்பை சார்ந்து அதன் விலைகளும் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்தன. அன்றைய கட்டத்தில் மெக்கா நகரம் அரேபிய தீபகற்பத்தின் சிறு பகுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நிலையான பொருளாதார கட்டமைப்பை கொண்டு பண்டங்களை சந்தைக்கு அனுப்பும் திருப்பு மையமாகவும் இருந்தது. நறுமணப்பொருட்களின் வர்த்தகம் இங்கிருந்து அரேபிய முழுவதற்கும் பரவி குறைஷி இனக்குழுவிற்கு வருமானத்தை பண வடிவில் அள்ளிக்குவித்த கேந்திரமாகவும் இருந்தது.
இதன் தொடர்ச்சியில் அரபுகள் அரேபிய தீபகற்பம் முழுவதையும் கைப்பற்றி அங்கு அரசமைப்பை ஏற்படுத்தினர். தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் அவர்கள் குடிமக்கள் மீது வரிவிதிப்பை ஏற்படுத்தினர். அங்கு வர்த்தக நடவடிக்கைக்கும், பண - பரிமாற்ற முறைமைக்கும் அனுமதி அளித்தனர். இந்நிலையில் மெக்கா குறைஷிகள் தங்கள் மூதாதையர்களின் வர்த்தக நடவடிக்கைகளை பின் தொடர்ந்தவர். அவர்களில் ச அத் பின் மொசைப் ஒருவர். தன் வாழ்நாள் முழுவதும் முன்னோர்களின் பொருளாதார நடவடிக்கையை அறிவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கி.பி 750 ல் அப்பாஸிட் வம்ச புரட்சிக்கு பின்னர் இனக்குழுக்களுக்கிடையே சமத்துவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது பெரும்பாலான மக்கள் இஸ்லாமிற்கு மாறி விட்டார்கள். மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகள் அரபுகள் வசம் வந்து விட்டன. வியாபார நடவடிக்கைகள் இந்த பிராந்தியம் முழுவதும் பரவி வியாபித்தன. ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்த பகுதிகள் ஒன்றிணைந்ததால் அதிகப்படியான புதிய பண்டங்கள் ஒரு பொதுவான சுழற்சி மையத்திற்கு திருப்பப்பட்டன. அதன் பிறகு இப்பிராந்தியங்களில் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இது பதினான்காம் நுற்றாண்டு காலத்திய நடவடிக்கையாகும். முஸ்லிம் பேரரசு காலத்திய வணிகர்கள் இலாபத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி தங்களின் விளைவை மதிப்பிட்டுக் கொண்டனர். அவர்களின் வணிக இலாபங்கள் ஒவ்வொன்றும் பண வடிவில் மாற்றப்பட்டன. இக்காலத்திய வணிகம் பற்றிய விளக்கம் பல்வேறு இஸ்லாமிய பொருளாதார அறிஞர்களால் கொடுக்கப்பட்டது. குறிப்பாக பதினான்காம் நூற்றாண்டு சமூகவியலாளரும், வரலாற்றாசிரியருமான இப்னு கல்தூண் இதில் முக்கியமானவர். அக்கால வணிக நடைமுறையை குறித்து இப்னு கல்தூண் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " வணிகம் பற்றிய அர்த்தம் தெரிந்தது தான். அதாவது பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதன் மூலம் மூலதனத்தை பெருக்கி இலாபத்தை ஏற்படுத்துதல். இந்த பொருட்கள் அடிமைகள் , தானியங்கள், மிருகங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆடைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இதில் உறிஞ்சப்பட்ட தொகையே இலாபம். இந்த இலாபத்தை உருவாக்க பொருட்கள் சந்தையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப சேமிக்கப்படுகின்றன. இதுவே அதிகப்படியான இலாபத்தை உருவாக்குகிறது. மேலும் வணிகர்கள் தங்களின் பொருட்களை தேவைக்கு ஏற்ப பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு சொந்த நாட்டை விட ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதுவும் அவர்களுக்கு அதிகப்படியான இலாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆக ஒரு பழைய வணிகர் வணிகத்தின் உண்மையை அறிய முயல்பவரிடம் இவ்வாறு கூறுகிறார். " மலிவாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய். இதுவே உனக்கான வணிகம்."
வணிகம் பற்றிய இப்னு கல்தூனின் மேற்கண்ட வரிகள் அக்காலத்திய எதார்த்தத்தை வெளிக்கொணர்பவை.அதே இப்னு கல்தூன் வணிகத்தின் கடன் நடவடிக்கைகள் குறித்து பிந்தைய கட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " ஒருவர் கடன் கொடுப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டால், பெரும்பாலானோர் அதை திருப்பியளிக்க மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் கடனீந்தோர் தங்களின் கடன் தொகைக்காக ஏராளமான கஷ்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது மாதிரியான பழக்கங்கள் ஒருவர் வணிகத்தில் ஈடுபடுவதை தடுத்து விடுகிறது. இது ஒரு தொழில் என்ற நிலையில் ஒருவர் சாதுரியமாக, தந்திரமாக, பிடிவாதமாக, கறாராக, கலக குணத்துடன் வணிகத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. சில அபூர்வ வணிகர்கள் மட்டுமே இம்மாதியான தவறுகளில் இருந்து விலகி நின்று வணிகச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள்."இப்னுகல்தூனின் முந்தைய கோட்பாடுகள் அக்காலத்தில் இஸ்லாமிய உலகில் நிலவிய சமூக பொருளாதார கட்டமைப்பை குறித்து அதிகம் விளக்குகின்றன. இப்னு கல்தூன் தன்னை சுற்றியுள்ள கலாசார உலகத்தை கூர்மையான கண் கொண்டு நோக்கினார். அவரை பொறுத்தவரை ஒரு மாதிரி வணிகன் என்பவன் அதற்காக போராடுபவனும், எங்கும் எப்பொழுதும், அதன் எல்லா வழிகளிலும் பணத்தை அடைபவனுமாவான். ஆக இடைக்கால முஸ்லிம் உலகம் ஆரம்ப கால இஸ்லாமிய உலகிலிருந்து பரிணாமமடைந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை கையாளும் திறன் பெற்றிருந்தது. மேலும் உழைப்பு பிரிவினை (Division of labour)அடிப்படையில் பொருட்களின் பரிவர்த்தனை குறித்தும் அறிந்திருந்தது. இவ்வாறாக இடைக்கால இஸ்லாமிய உலகம் பணத்தின் மதிப்பையும், விலைமதிப்பற்ற உலோகங்களின் குணங்கள் பற்றியும் அறிந்திருந்தது. இங்கு செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை நிலத்தில் முதலீடு செய்தார்கள். இந்த கட்டம் ஒரு வேளை முதலாளித்துவ திசையல்லாத வளர்ச்சி நிலையா? என்பதை பற்றிய சந்தேகம் இன்றும் பொருளாதார அறிஞர்களிடம் இருக்கிறது.
ஆனால் நமக்கு நிலத்தில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்குமான விகிதாச்சார உறவு குறித்து ஏதும் தெரியவில்லை. இது அதிகமும் நேரம், இடம், சூழல் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது. இப்னு கல்தூன் பாதுகாப்பற்ற தருணங்களில் நிலத்தில் முதலீடு செய்வதை அபாயம் என்கிறார். முஸ்லிம் உலகில் இவ்வாறான தொழில் வளர்ச்சியானது உற்பத்தியை நோக்கிச் சென்று பரிவர்த்தனை மதிப்பை சமன் செய்ய முயன்றது. ஒரு பொருளாதார கட்டமைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர மாதிரியின் படி முன்னோக்கிச்சென்றால் அது காலத்திற்கு ஏற்ப ஒவ்வாமையை தான் ஏற்படுத்தும் என்கிறார் மாக்சிம் ரோடின்சன். மேலும் மூன்று வித கருத்தியல்கள் முக்கியமானவை. தேசியவாத கருத்தியல், மதகருத்தியல், பிரபஞ்சம் தழுவிய மனித கருத்தியல். இம்மூன்றும் பிரதேசம், கடவுள், மனிதன் போன்ற கருதுகோள்களால் சமன் செய்யப்படுகின்றன. இங்கு மதகருத்தியல் அடிப்படையிலான கடவுள் சார்ந்த சமூக பொருளாதார கட்டமைப்பு முன்னோக்கம் சாராதது என்கிறார் ரோடின்சன். சோஷலிச சமூக பொருளாதார கட்டமைப்பில் இஸ்லாம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. பொருளாதார நிகழ்வுக்காக வெகுஜன திரளின் கருத்தியல் அடிப்படையிலான நகர்வு என்பது நவீன தேவையாக இருக்கிறது. முந்தைய கட்டத்தில் ஒருவரும் பொருளாதார கட்டமைப்பை கால மாற்றத்திற்கு ஏற்ப நகர்த்துவது குறித்து சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆக இஸ்லாமும் வெகுஜன திரளை பொருளாதார முடிவுகளை நோக்கி நகர்த்தவில்லை என்கிறார் ரோடின்சன். முதலாளித்துவ கருத்தியலை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக இஸ்லாம் அதன் எல்லைகளை தொட்டும், தாண்டியும், முறித்தும் பயணித்து வந்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய மற்றும் முந்தைய உதாரணங்கள் இதனை அதிகமும் பிரதிபலிக்கின்றன. இதனை குறித்து ஐரோப்பிய ஓரியண்டலிஸ்டாக அதிகம் ஆராய்ந்த மாக்சிம் ரோடின்சன் இஸ்லாம் குறித்த பொருளாதார கோட்பாட்டாளரில் முக்கியமானவராக தெரிகிறார்.