காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, June 16, 2009

நாகரீகத்திற்கான பெரும் போர்கள் - செமிடிக் நாகரீகம் குறித்து




பௌதீக உலகின் இயக்க போக்கில் மனித இனம் முதன்மை பெறுகிறது. இந்த முதன்மை தன்மை அதன் வளர்ச்சி நிலையோடு வெளிப்படுகிறது. நாகரீகம் என்ற சொல்லாடல் இந்த வெளிப்பாட்டோடு இணைந்த ஒன்றே. மனிதர்கள் தேவை என்பதற்கான பிரக்ஞையை அடையும் போது தேர்வு என்ற கருத்துரு உருவாகிறது. ஆதி மனிதனின் இந்த தேர்வு என்ற கருத்துருவின் காலம் சார்ந்த தர்க்க ரீதியான தொடர்ச்சியே நாகரீகம். நாகரீகம் என்பது வரலாற்றுக்கு முந்திய தொன்ம வகையில் வருகிறது. தொன்மம் மற்றும் வரலாறு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் செமிடிக் நாகரீகமே முந்திய நிலையில் இருக்கிறது. செமிடிக் என்ற சொல் ஆப்ரோ-ஆசியா மொழிக்குடும்பத்தில் இருந்து வந்தது. அம்காரிக், அராமிக், அக்கடிக், அராபிக், ஹிப்ரு, பொனிசியன் போன்றவை இந்த குடும்பத்தில் வரக்கூடியவை. இந்த மொழித்தொகுதியே செமிட்டிக் மக்கள். செமிடிக் என்ற சொல் நோவாவின் மகனான செம் என்பவரின் பெயரிலிருந்து தொடர்ந்து வந்தது என்றும், கிரேக்க மொழிக்கூறின் திரிந்த வடிவம் என்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் வரலாற்று உலகில் நிலவுகின்றன. உலகின் மனித இருப்பு ஒன்றுக்கு தொடக்கமிட்டவர்கள் அவர்கள். செமிடிக் மக்கள் மெசபடோமியா பள்ளத்தாக்கோடு இயைந்தவர்கள் என்பதை முந்தைய வரலாற்றுப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகள் தொடர்ச்சியை கொண்டது. இதன் அசைவியக்கம் அவ்வப்போது மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது. மேலும் செமிடிக் நாகரீகத்தின் ஒரு பகுதியில் மெசபடோமியா நாகரீகமே அறிவார்ந்த சமூகத்தின் முன்பு நிற்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பாதி காலகட்டம் வரை இதைப் பற்றிய தகவல்கள் ஆய்வாளர்களுக்கு மிகக்குறைவாகவே கிடைத்தன. அதன் நீள் எல்லை மிகக்குறைவாக இருந்தது. அவர்கள் பைபிள் மற்றும் பயணக்குறிப்பாளர்களிடமிருந்து தகவல்களை எடுத்துக் கொண்டனர்.கி.பி.1850 ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியே முதன் முதலாக செமிட்டிக் நாகரீகம் குறித்த தகவல்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கோயில்கள், சிற்பங்கள், சிதிலமடைந்த கட்டடங்கள், அரண்மனைகள், பிற இடங்கள் போன்றவை மெசபடோமியா என்ற நாகரீகத்தின் காலத்தை ஒரே நேரத்தில் பின்னால் நகர்த்தியது.
வரலாற்றில் எல்லா பெரிய நாகரீகங்களும் அலைந்து திரிதலை அடிப்படையாக கொண்டவை என்பார் பிரெஞ்சு சிந்தனையாளரான ழீன் பார்னர். இதே கோட்பாடு மெசபடோமியா நாகரீகத்தோடு சரியாகவே பொருந்துகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு இணையான நாகரீகத்துடன் அலைந்து திரிந்திருக்கிறது. சுமேரிய, பாபிலோனிய, அசிரிய போன்ற இணைகளுடன் மனித வரலாற்றில் பெரும் சமூகத்தை கட்டியெழுப்பியது. மேலும் செமிடிக் நாகரீகத்தின் பகுதியான எகிப்து முதல் நாகரீகமாக அறியப்படுகிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரொடட்டஸ் எகிப்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். " எகிப்தை பொறுத்தவரை நான் இப்போது விரிவாக பேச வேண்டும். எங்கும் கண்டிராத அதிசய பொருட்கள் மற்றும் பூமியில் எங்கும் இல்லாத வெளிப்படுத்த முடியாத மிகப்பெரும் வேலைப்பாடுகள் நிரம்பியதாக அது இருக்கிறது." பண்டைய நாகரீகம் என்ற கருத்தாக்கம் வித்தியாச வகைப்பட்ட சமூகத்தை உடையதாக, மனித வரலாற்றின் பரிணாம பார்வையை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. சமூக பரிணாம வாதம் தொன்மம் என்ற வகையில் கடந்த நூற்றாண்டின் தசாப்தங்களில் மேற்கத்திய கல்வியாளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. இது மேற்கத்திய நாடுகளில் காலனிய சுரண்டலை நியாயப்படுத்தும் ஒன்றாக மாறியது. மத்திய கிழக்கு- மேற்கு முரண்பாட்டின் தொடக்கம் இந்த தாக்குதல்களின் பிரதிபலிப்பே. மேலும் பண்டைய நாகரீகங்கள் வர்க்க அடிப்படையிலான சமூகத்தை அடிப்படையாக கொண்டவை.அவை உயர்தரத்திலான சமூக, பொருளாதார சமத்துவமின்மையை பிரதிபலிக்கின்றன. அதிகாரம் என்பது விவசாய, அல்லது வேட்டைத்தொழிலின் உபரியை கட்டுப்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் இருந்தது. இந்த சமூகங்களிடையே தொழில்நுட்ப வளர்ச்சி மிகக்குறைவாகவே இருந்தது. மனித உழைப்பு கூட சில சமயங்களில் சிக்கலாக இருந்தது. இந்த சமூகங்கள் அவற்றிற்கிடையே படிநிலைகளையும், உள்விதிகளையும் கொண்டிருந்தன. மேலும் அவை சுரண்டலின் அப்பட்டமான வடிவமாக விளங்கின.அரசன் மற்றும் சிறிய ஆளும் வர்க்கம் போன்றவை அடித்தள வர்க்கத்தினரிடமிருந்து விவசாய உபரியை உறிஞ்சி கொண்டன. இது இன்னொரு நிலைக்கு நீட்சி அடைந்து எஜமான் -அடிமை கட்டமைப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கால நாகரீகம் என்பதை எழுத்தறிவோடு இணைந்த ஒன்றாக மானுடவியலாளர்கள் காண்கிறார்கள். இந்த வாதத்திற்கு உதாரணமாக அக்காலத்தில் உருவான நகர்புற அரசு என்னும் கருத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். நகர்புறத்தில் உருவான மக்கட் தொகுதி மொழியறிவுமிக்கதாக, எழுத்துக்களை வரையும் திறன்மிக்கதாக விளங்கியது. செமிடிக் நாகரீகத்தின் பகுதியான எகிப்து, மெசபடோமியா ஆகியவை கி.மு பத்தாம் நூற்றாண்டு காலத்தில் வளர்ச்சியடைந்த எழுத்து முறையை கொண்டிருந்தன. அவை ஒலியியல், தொடரியல் போன்றவற்றையும் உள்ளடக்கி இருந்தன. மேலும் நகர்புற அரசுகள் மற்ற நகர்புற அரசுகளுடன் போட்டியிட்டுக் கொண்டன. எகிப்து, ஹிப்ரு, மெசபடோமியா ஆகியவை நகர்புறங்களையும், அகால பாலைவனங்களை உடைய கிராமப்புறங்களையும் கொண்டிருந்தன. மேலும் செமிடிக் நகர்புறங்கள் கைவினை பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தின. அவை தனக்காக மட்டுமின்றி மற்ற சமூகங்களின் தேவைக்கும் ஏற்றவாறு உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கிராமங்கள், உற்பத்தி நகரம், அண்டை நகரம் ஆகியவற்றிற்கு விநியோகம் செய்யப்பட்டன. பண அலகு என்பது அப்போது வழக்கத்தில் இல்லை. பண்ட மாற்று முறைப்படி பொருட்கள் பரிமாறப்பட்டன. இந்த முறை குறிப்பிட்ட இடங்களில் சந்தை முறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. எகிப்து, சிரியா, மெசபடோமியா (ஈராக்) ஆகியவை இவ்வாறான சந்தை பரிமாற்றத்திற்கு உட்பட்டன. அவை அக்காலத்தில் சாத்தியமான பொருளாதார அலகுகளை உருவாக்கக்கூடியவையாக இருந்தன. செமிட்டிக் நாகரீகத்தின் இந்த நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எகிப்திலும், சிரியாவிலும், அரேபிய தீபகற்பத்திலும் பொருளாதார அடிப்படையில் வலுவான சக்தியாக விளங்கினார்கள். உணவு சாரா உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடதக்கதாக இருந்தது. மேலும் அக்காலகட்டத்தில் நிலவிய சந்தை முறையின் எச்சங்கள் மெசபடோமியா நாகரீகம் குறித்து அகழ்வாய்ந்த ஆய்வாளர்களுக்கு காண கிடைத்தன. அகழ்வாய்வு மூலம் கிடைக்கும் தரவுகள் நாகரீகம், அக்கால கலாசார நடைமுறை ஆகியவை குறித்த விரிவான முன்னோட்டத்திற்கு உதவுகிறது.


செமிட்டிக் நாகரீகத்தின் உச்ச வெளி என்பது கிராமபுறங்களை அடிப்படையாக கொண்ட பதூயீன் என்ற நாடோடி மக்கட்தொகுதி. இவர்கள் எகிப்து, சிரியா, ஈராக், அரேபிய தீபகற்பம் ஆகிய இடங்களில் பரந்து விரிந்திருக்கிறார்கள். நாடோடிகளில் மேய்ச்சல் தொழில் செய்பவர்கள், விவசாயம் செய்பவர்கள், வேட்டையாடுபவர்கள் என்ற மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் பதூயீன்கள் பெரும்பாலும் மேய்ச்சல் தொழில் உடையவர்களாக இருந்தார்கள். கானான்கள், சமாரியன்கள் இவ்வகைக்குட்பட்டவர்கள். இவர்களின் மேய்ச்சல் நடவடிக்கைகள் கால்நடைகளின் வகைகளை வைத்து ஒட்டகம் மேய்ப்பவர், செம்மறி ஆடுகளை மேய்ப்பவர் மற்றும் ஆடுகளை மேய்ப்பவர் என்றவாறாக பிரிக்கப்பட்டன. முதலாம் வகையினர் சிரியா, சகரா மற்றும் அரேபிய பாலைவனங்களில் இருந்தார்கள். இரண்டாம் வகையினர் ஜோர்டான், சிரியா, ஈராக் ஆகிய இடங்களில் இருந்தார்கள்.மூன்றாம் வகையினர் தெற்கு அரேபியா மற்றும் சூடான் ஆகிய இடங்களில் இருந்தார்கள். இவர்களில் ஒட்டகம் மேய்ப்பவர் உயர்ந்த இடத்தில் இருந்தார். அரேபிய தீபகற்பத்தை சார்ந்த பதூயீன்களுக்கு வரலாற்றில் தனித்த இடம் பதிந்தது இந்த அடிப்படையில் தான்.அரேபிய தீபகற்பத்தை சார்ந்த பதூயீன்களில் ஒரு பகுதியினர் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டார்கள்.பேரீத்த பழ விவசாயம், பார்லி போன்ற விவசாய முறைகள் நடைமுறையில் இருந்தன. இவர்கள் விவசாயம் மற்றும் உடல் உழைப்பாளர்களாக இருந்த போதும் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்பு செயலற்று முடங்கி போனார்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இவர்களின் மேய்ச்சல் நிலங்கள் அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 1950 ல் சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகியவை பதூயீன்களின் நிலத்தை தேசியமயமாக்கின. ஜோர்டான் மேய்ச்சல் தொழிலுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பதூயீன்களுக்கும், அரசுகளுக்கும் மோதல் ஏற்பட்டன. இது விவசாய நிலத்தில் பயிரிட்டவர்கள் வரை நீண்டது. பதூயீன்களின் சமூகம் ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட தந்தைவழி சமூகமாகும். அகமண முறை, பலதாரமணம் அவர்களிடையே வழக்கில் இருந்தன. இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டார்கள். அவர்களின் குடும்ப அலகு நிரந்தர நிலமக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தது. சராசரியான குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து மிக வித்தியாசப்பட்ட ஒன்றாக, எவ்வித நிறுவனத்தன்மையற்றதாக பதூயீன் வாழ்வியல் அமைப்பு முறை இருந்தது. இனக்குழுக்களாக தொடங்கிய இவர்களின் வாழ்முறை காலத்தின் நகர்வில் இனத்தோற்றத்திற்கு வழி வகுத்தது. இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை குறித்து ஆராய்ந்த டி.டி.கோசாம்பி சாதிய சமூகம் என்பது இனக்குழு சமூகத்தின் (Tribal society) பரிணாம வளர்ச்சி முறையே என்றார். இனக்குழுக்களின் நாடோடி குணாதிசயம் அவர்களை நிலத்தோடு நிரந்தரப்படுத்தும் போது குறிப்பிட்ட சமூக அமைப்பை ஏற்படுத்துகிறது. இதே விஷயம் தற்போதைய அரபு சமூகத்திற்கும் பொருந்துகிறது. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அரசுகளின் கையில் வந்த பிறகு அவர்களின் சமூக அமைப்பு குலைக்கப்பட்டிருக்கிறது. சிரியா, லெபனான், ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பதூயீன் நாடோடிகளின் நடப்பு வாழ்நிலை இதை பிரதிபலிக்கிறது.


செமிடிக் நாகரீகம் பரிணாமமடைந்து மதங்களாக ஒழுங்கமைத்த போது மேற்கத்திய நாகரீகத்தோடு உராய்வு ஏற்பட்டது. குறிப்பாக யூதத்துக்கும், கிறிஸ்தவத்துக்குமான உராய்வை குறிப்பிடலாம். முதன் முதலான உராய்வு என்பது ரோமானியர்கள் கி.பி 70ல் ஜெருசலத்தை கைப்பற்றி அங்குள்ள புனித ஆலயத்தை இடித்ததில் இருந்து தொடங்குகிறது. ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர்.இதனை ரோமானியர்கள் யூதர்களுக்கான புனித தண்டனையாக குறிப்பிட்டனர். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு காரணமான யூதர்களின் மேல் எதிர்செயல்பாடாக இது பார்க்கப்பட்டது. இதனின் காலந்தொடர்ந்த நீட்சியே 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத வெறுப்பு (Anti-semitism). இதை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல்லான anti-semitism முதன் முதலாக 1879 ல் ஜெர்மானிய இனவாதியும், இதழியலாளருமான வில்லியம் மாரால் முன்வைக்கப்பட்டது. இதற்காகவே அவர் யூதர்களின் மேல் ஜெர்மானியர்களின் வெற்றி (The victory of germandom over jewry) என்ற நூலை வெளியிட்டார். யூதர்கள் மேற்கின் முதல் அதிகார மையம் என்றும், வேர்களற்ற சுதந்திரர்களாக அலைந்து திரிந்து ஜெர்மனியை யூத மயமாக்க முயல்கிறார்கள் என்றும் மார் குறிப்பிட்டார். இதன் பின்னர் ஜெர்மனியில் அவர் யூத எதிர்ப்பு அமைப்பு ஒன்றை தொடங்கினர். இதன் தொடர்ச்சியே இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லரின் இன அழிப்பு கோட்பாடு. இவ்வாறான காலநிலைகளால் செமிடிக் என்பது நவீன கால ஐரோப்பாவில் யூதர்களை குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. உலக நாகரீகத்தின் முதன்மையாக, ஆசிய-ஆப்ரிக்க மொழிக்குடும்பத்தின் மிகப்பெரும் தொகுதியாக இருக்கும் செமிடிக் நாகரீகம் உலகின் பெரு மதங்களை உருவாக்கிய உற்பத்தி கூடமுமாகும். இங்கிருந்து தான் அவை கிளைத்து பிற பிரதேசங்களில் வியாபித்தன. வரலாற்று பாரம்பரியமும், நெடிய மரபையும் உள்ளடக்கிய எகிப்தும், பசுமை வளத்தை கொட்டி கொழித்த யூப்ரடீஸ் , டைக்ரிஸ் , மற்றும் நைல் நதிகளும் , அசிரிய, சுமேரிய, மெசபடோமிய பிரதேசங்களும் செமிடிக் நாகரீகம் உலகிற்கு தந்த பெரும் கொடை. இதன் தொடர்ச்சியில் 21 ஆம் நூற்றாண்டு என்பது நாகரீகங்களின் மோதலாகவே இருக்கும் என்ற சாமுவேல் கான்டிங்டனின் வாதம் 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய யூத வெறுப்பு அரசியலின் இன்றைய திரிக்கப்பட்ட வடிவம். செமிடிக் என்ற சொல் வெளிப்படுத்தும் பிரதியின் எல்லையை நாம் இந்த நூற்றாண்டின் இயக்க போக்கில் அறிந்து கொள்ள முடியும். 9/11 நிகழ்வு நம்மை அதை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது.

Monday, June 8, 2009

அதிகாரம், அரசியல் மற்றும் கலாசாரம்- எட்வர்ட் செய்த் அறிவுலகில் ஒரு நெடும் பயணம்




எட்வர்ட் செய்த் மரணமடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி பரவலான எழுத்தோட்டங்கள் இருக்கின்றன. இவரை பற்றிய எழுத்தோட்டங்கள் கோலப்புள்ளிகள் மாதிரி வெளிவந்திருக்கின்றன. கீழைச்சிந்தனை மரபில் எட்வர்ட் இன்றும் குவியமானவராக இருக்கிறார். காலனியத்திற்கு பிந்தைய கட்டத்தில் மேற்கின் அறிவுலகில் ஆதிக்கம் செலுத்திய கீழைத்தேய வாதி. பௌதீக உலகின் அறிவுத்தளம் என்பது மேற்காக புனையப்பட்ட தருணத்தில் தன் Orientalism நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில் இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த்தின் இளமைக்காலம் பாலஸ்தீன் பகுதியில் ஆரம்பமானது.1935 ல் ஜெருசலமில் ஒரு நடுத்தர குடும்பத்தில் செய்த் பிறந்தார். 1948 ல் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீனில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் குடும்பம் எகிப்துக்கு புலம்பெயர்ந்தது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த செய்த் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மேற்படிப்பை தொடர்ந்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு பட்டங்களை பெற்ற செய்த் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். எட்வர்ட் செய்த் மேற்கத்திய வாழ்க்கை மூலம் தன் மொழிப்புலத்தை மிக வலுவாக்கிக்கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளில் வலுவான அடித்தளம் அவருக்கிருந்தது. மேலும் தாய்மொழியான அரபி அவரை பின்தொடர்ந்து வந்தது. மொழியின் சாத்தியபாடுகள் அவரை முன்னோக்கி இழுத்துச் சென்றன. இவரின் முதல் நூல் 1966 ல் Joseph conrad and fiction of autobiography என்ற பெயரில் வெளிவந்தது. ஜோசப் கன்ராட் படைப்புகள் பற்றிய மதிப்பீடாகவும், விமர்சன கோட்பாடாகவும் இருந்தது. மேலும் நவீனத்துவம் , சிந்தனை மரபில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த பதிவாகவும் இருந்தது.
எட்வர்ட் செய்த்தை மேற்கில் அதீதமாக கவனப்படுத்தியது அவரின் ஓரியண்டலிசம் நூலாகும். பின் காலனிய சிந்தனையின் மூலநூலாக அறிவு ஜீவிகளால் அளவிடப்படும் இது மேற்கு பற்றிய பெரும் பிம்பத்தை தகர்த்தது. ஐரோப்பா காலம் காலமாக கிழக்கத்திய பிராந்தியத்தை மதிப்பிட்ட முறையை செய்த் விமர்சித்தார். குறிப்பாக மேற்கு அரபுலகை அறிவு ரீதியாக அணுகிய விதம் வரலாற்று ரீதியாக மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார். அவரின் கருத்துப்படி ஓரியண்டலிசம் என்பது கிழக்கு (Oriental)மற்றும் மேற்கு (Occidental)ஆகியவற்றின் இயற்கை தத்துவம் மற்றும் அறிவுதோற்றவியல் அடிப்படையிலான சிந்தனா வகைமையே. அது ஆசிய கண்டத்தின் அல்லது கிழக்கின் புவியியல் , அறவியல் மற்றும் கலாசாரத்தை குறிக்கும்.இரு நிலப்பிளவுகளின் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கவிஞர்கள், வரலாற்றாளர்கள், ஆட்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் இந்த வித்தியாசத்தை வடிவமைக்கிறார்கள். நெப்போலியன் எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து ஓரியண்டலின் எதார்த்த வடிவம் தொடங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை கைப்பற்றிய நெப்போலியன் படிப்படியாக அல்ஜீரியா, மொராக்கோ போன்ற நாடுகளை கைப்பற்றினார். இதன் தொடர்ச்சியில் மத்திய கிழக்கின் இந்த பிரதேசங்களில் மேற்கின் அரசியல் மற்றும் கலாசார ரீதியான மேலாதிக்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து இந்த பிராந்தியங்களில் பிரிட்டனின் வருகையும் இந்த ஆதிக்கத்தை தொடர செய்தன. சிவில் மற்றும் அரசியல் சமூகம் சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. சிவில் சமூகம் பள்ளி, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் சமூகம் அரசு, ராணுவம், காவல்துறை, அதிகார வர்க்கம் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. இதில் அரசியல் சமூகத்தின் மீது நேரடியான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் கலாசாரம் மறைமுகமாக மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. கலாசாரத்தின் சில வடிவங்கள் சில தருணங்களில் கருத்தியல் ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ மற்றொரு சிவில் சமூகம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை கிராம்சி சமூக மேலாண்மை (Hegemony) என்றார். கிராம்சி கூறிய இந்த மேலாண்மையே ஓரியண்டல் சொல்லாடல் மீதும் படிந்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கத்திய உலகமானது ஆதிக்க கருவியாக செயல்படுகிறது. இங்கு கருத்தியல் உற்பத்தி கருவிகளின் பங்கு முக்கியமானது. ஒரு கலாசாரத்தின் அல்லது நாகரீகத்தின் கருத்தை உருவாக்கும் கருவியானது அது உருவாக்கும் பிரதியை அசலாக்க வேண்டும். அந்த அசல் முறைப்படியானதாக இருக்க வேண்டும். இதை அசலானது அல்லது போலியானது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மேற்கு இருக்கிறது என்கிறார் செய்த். கீழை சமூகத்தின் தொன்மங்கள், வரலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனித பிரதிகள், ஆவணங்கள் போன்றவற்றை போலியானவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது. உலக நாகரீகத்தை கண்டறிந்தது மற்றும் அதை வியாபித்தது மேற்கு தான் என்பதான புனைவை உருவாக்கி இருக்கிறது. கீழை சமூகத்தின் குறிப்பாக மத்தியகிழக்கு அரபு சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் பொருட்படுத்த தகாதவை என்று மேற்கு காலம் காலமாக கருதி வந்திருக்கிறது. இதன் மூலம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. மேலும் கீழைத்தேய கோட்பாடு அதன் எதார்த்த புறநிலையையை விட அதிகமும் கலாசார நடைமுறைகள் மீதே கவனம் செலுத்துகிறது. கீழை சமூகங்களில் குடும்பம், மதம் போன்ற முதல் நிலை மையங்கள் அதிக கட்டுப்பாட்டுடன் விளங்குவதை இதனடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். இவை இரண்டும் குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல்மயமாகும் என்றார் எட்வர்ட் செய்த். அதற்கு உதாரணமாக மத்தியகிழக்கு அரபு மற்றும் முஸ்லிம் சமூகத்தை எடுத்து கொண்டார். இவை சில கருதுகோள்களை கொண்டு ஸ்திரமற்றதாக இருக்கின்றன. 1.மேற்கின் இஸ்லாம் மற்றும் அரபுலகம் பற்றிய அவநம்பிக்கை. 2. அரபுகளுக்கும் இஸ்ரேலிய சியோனிஸ்ட்களுக்குமான போராட்டம். இது அமெரிக்க யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம். 3. அரபுகள் அல்லது இஸ்லாம் குறித்த உணர்ச்சிபூர்வமற்ற முறையிலோ அல்லது அடையாள பூர்வமாகவோ விவாதிக்க மேற்கில் எந்த கலாசார நிலைமையும் இல்லாதது. மேலும் மத்திய கிழக்கு இன்று மிகப்பெரும் அதிகார அரசியல், எண்ணெய் பொருளாதாரம், இரட்டை அதிகார மனத்தை கொண்ட விடுதலை வேட்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை அனைத்துமே மேற்கின் சாதகமான விஷயமாக மாறி இருக்கின்றன. இதற்கான மாற்றுகளை தேடுவதற்கான உபாயங்களை எட்வர்ட் செய்த் கண்டறிந்தார்.
எட்வர்ட் செய்த்தின் எழுத்து, சிந்தனை, அறிவுலக செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய கோடிடும் பகுதியாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் செய்த்தின் நிலைபாடு தெளிவாக இருந்தது. அவர் சுதந்திர இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் அமைவதில் உடன்பாடாக இருந்தார். இனரீதியாக இணக்கமான பிரேதசமாக இரண்டும் அமைய வேண்டும் என்ற கனவே கடைசி வரை அவரிடம் இருந்தது. இந்த பிரதேசத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமை என்பது பிளவுபடாதது. நெகிழ்வுதன்மை கொண்டது. பரஸ்பர புரிதல் அடிப்படையில் வரலாற்று ரீதியாக இரு யூத, அரபுகளின் எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றார். பாலஸ்தீன் தேசிய கவுன்சில் அதன் பிறகு பாலஸ்தீன் விடுதலை இயக்கம் போன்றவற்றில் இருந்த எட்வர்ட் செய்த் 1993 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உருவான இஸ்ரேல் பாலஸ்தீன் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். அது பாலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்க செய்வதற்கான அறிகுறி என்றார். காசா மற்றும் மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அது கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது. மேற்கத்திய வாழ்க்கையின் காலங்கள் முழுவதையும் பாலஸ்தீன் துயரம் குறித்த படிப்புக்கும், போராட்டத்துக்குமாக செய்த் கடந்து சென்றார். ஐரோப்பிய சூழலில் பல்வேறு அறிவுஜீவிகளிடம் இதுகுறித்த அவரின் வாதம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது இந்த விவகாரம் பற்றிய சர்வதேச அவதானத்துக்கு வழி ஏற்படுத்தியது. குறிப்பாக சார்த்தர், லியோதர்த், அலன்பதூ போன்றவர்களிடம் அதிகமாக விவாதித்தார். இதற்காகவே Question of palestine என்ற நூல் அவரிடம் இருந்து வெளிவந்தது. பாலஸ்தீன் குறித்த மிக விரிந்த வரலாற்று பார்வையையும், தேசிய இனம் பற்றிய விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் செய்த் விமர்சித்தார். அதன் பின்னால் இருக்கும் அமெரிக்க அதிகாரவர்க்க நலனையும் வெளிக்கொணர்ந்தார். அமெரிக்க யூதர்களின் பணம் மற்றும் உடல்ரீதியான ஒத்தாசைகள் அமெரிக்க அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்களின் பணமே அங்கு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய பலமாக இருக்கிறது. இவர்களின் மூளைகள் தேர்தல் முடிவில் முக்கிய தளமாக செயல்படுகின்றன. இதனின் தூர பிரதிபலிப்பே அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாடு. ஒருபக்கம் எண்ணெய் பொருளாதார பலத்திற்காக அரபு நாடுகள் மீதான அதன் நேசப்பார்வை, மறுபக்கம் இஸ்ரேலுக்கு சகல அம்சங்களிலான உதவி இவை இரண்டும் அதன் இரட்டை சர்வாதிகார தன்மையை வெளிப்படுத்த போதுமானவை. தான் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த போதும் பல்வேறு விஷயங்களில் செய்த் அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டார். செய்த்தின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாட்டை அமெரிக்க வலதுசாரி இதழ் ஒன்று விமர்சித்தது. அவரை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த அறிவார்ந்த அகதி என்று கிண்டலடித்தது. 1977 ல் சில பாலஸ்தீனிய தலைவர்கள் பாலஸ்தீன் நிலபரப்பு மீதான இஸ்ரேலின் உரிமையை ஒத்துக்கொண்டார்கள். இதை பற்றி செய்த் இவ்வாறு குறிப்பிட்டார்." நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலபரப்பு மீதான இறைமையை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் -பாலஸ்தீன் விவகாரத்தை பொறுத்தவரை செய்த் மற்ற எல்லா சிந்தனையாளர்களை விட சிறந்த காலனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருந்தார். இஸ்ரேல் மற்றும் யூத விவகாரத்தின் வரலாற்று ரீதியான யதார்த்தத்தையும், ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத எதிர்ப்பு சிந்தனையின் தோற்றத்தை பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். ஒரு தேர்ந்த தத்துவார்த்த நிலைபாடு அவரிடமிருந்தது.பின் காலனியம் குறித்த எட்வர்ட் செய்த் சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலனியம் உலக வரலாற்றில், குறிப்பாக கிழக்கில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்தார். 1815 க்கும் 1918 க்கும் இடைபட்ட கட்டத்தில் ஐரோப்பாவின் பிரதேச ஆதிக்கம் மொத்த உலக பரப்பில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்தது. இங்கு மானுட மையவாதம் (Anthropocentrism)என்பது ஐரோப்பிய மையவாதமாக (Europocentrism)மாறிபோனது. இன்று பிரதேச கட்டுப்பாடு பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடாக மாறிவிட்டது. கீழை சமூகத்தின் நுண்தளங்களில் மேற்கின் இந்த தாக்கம் அங்கு நிலையான சமூக பொருண்மையை ஏற்படுத்தி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் மத்திய கிழக்கில் பரவலாக ஆதிக்கம் செலுத்தின. இவை 14 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவத்தோடு அடையாளப்படுத்தப்பட்டன. இதற்கான எதிர்வினை இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனிய விடுதலை போராட்டத்தின் வடிவில் வெளிப்பட்டது. பல தேசிய தலைவர்கள் வட்டார அரபு மொழியை தங்கள் விடுதலை பிரசார உணர்வு ஊடகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக எகிப்தின் அன்வர் சாதத், சிரியாவின் மிஷல் அப்லாக், சாதிக் ஏ ஆஸம் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடல்களை அரபு மொழியில் உருவாக்கினர். வெகுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இது மேற்கின் கலாசார ஊடுபாவலுக்கு எதிர் செயல்பாடாக அமைந்தது. இவ்வாறாக கிழக்கின் மொழி என்பது கடந்த நூற்றாண்டின் இடைக்கட்டத்தில் காலனிய விடுதலை கருவியாக செயல்பட்டது.


எட்வர்ட் செய்த் இயற்கையை மீறிய சக்திகளை விட மானுடத்துவத்தின் மீது அதிகமும் நம்பிக்கை வைத்திருந்தார். மனித சமூகத்தின் வரலாறு மற்றும் அதன் ஆக்கங்கள் மீது செய்த்திற்கு அதிக ஆர்வம் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 18 ஆம் நூற்றாண்டு இத்தாலிய தத்துவவாதியான விக்கோவின் கோட்பாடுகள் செய்த்தை அதிகம் ஈர்த்தன. விக்கோ புனிதங்களின் செயல்பாட்டு தளத்தை மனிதர்களின் செயல்பாட்டு தளத்தில் இருந்து பிரித்து பார்த்தார். மேலும் மானுட செயல்பாடுகள் சார்ந்த பகுப்பாய்வை தன் கோட்பாடுகளில் வெளிப்படுத்தினார். எட்வர்ட் செய்த் யூதர்கள் அல்லாத நாடற்றவர்கள், இனக்குழுக்கள் ஆகியோரின் வரலாற்றை அறிவதிலும், அதை அவதானிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். மேலும் காலனிய மேலாண்மை (Hegemony)என்பது வெறுமனே அரசியல் மற்றும் இராணுவ ரீதியான ஒன்றல்ல. மாறாக கலாசார பொருண்மையே. தந்திரபூர்வமாகவோ அல்லது அதந்திரபூர்வமாகவோ ஐரோப்பிய கலாசாரம் இனவாத கோடுகளாக காலனிய ஆட்சியாளர்களால் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக செய்த் குறிப்பிட்டார். மறுமலர்ச்சி கால மனித மதிப்பீடுகள் எவ்விதத்தில் இருந்தாலும் அவை காலனிய சொல்லாடல்களின் பிரதியாக்கமே என்றார் செய்த். மேலும் அவரின் இஸ்லாம் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை. மேற்கு இஸ்லாம் பற்றி வரலாற்று ரீதியாக புனைந்து வைத்திருக்கும் கருதுகோள்கள் மீது செய்த் சந்தேகம் கொண்டிருந்தார். அதற்காவே 1981 ல் Covering Islam என்ற நூலை எழுதினார். இது முழுமையாக அறிதல், பாதுகாத்தல் என்ற இரு அர்த்த பிரதிகளை உற்பத்தி செய்தது. இதில் இடைக்கால ஐரோப்பிய வரலாறு எவ்வாறு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயான வெறுப்புணர்ச்சியின் நகலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி செய்த் குறிப்பிட்டார். மேலும் கிறிஸ்தவ மற்றும் யூத அடிப்படைவாதிகள் இஸ்லாம் குறித்த பக்க சார்பான பார்வையை முன்னோக்குவது குறித்தும் அதில் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க பத்திரிகையாளரான பிரான்ஸ் பிக்ஜெரால்ட் இந்நூலை ஒவ்வொரு மேற்கத்திய பத்திரிகையாளரும், அதன் ஆசிரியர்களும் படிப்பது அவசியம் என்றார். மேலும் செய்த்தின் சிந்தனையில் முக்கியமானது இலக்கிய பிரதிகளின் கால எல்லை மற்றும் எல்லையற்ற தன்மை. (Time bound and timeless of Text)பிரதியின் காலமற்ற தன்மை என்பது அது பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த போதும், நடப்பு சூழலுக்கு பொருத்தமற்றதாக இருந்த போதும் அதை படிப்பது, அவதானிப்பது, ஜமாய்ப்பது. மாறாக கால எல்லை என்பது அந்த பிரதியின் உருவாக்க காலமும்,அந்த காலத்திய கலாசார சூழல் மற்றும் சமூக அழகியலின் குறுக்கான ஊடாட்டமும் கலந்த ஒன்று. மத சமூகங்கள் இந்த முரண்களின் ஊடாக தான் பயணம் செய்து வருகின்றன. இதை குறித்து மார்க்ஸ் தன் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான ஒரு பங்களிப்பு (A Contribution to the critique of Political economy ) நூலில் குறிப்பிட்டார். தொழில்மய சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு கிரேக்க தொன்மங்கள் குறித்து உவகை அடைகிறான். அந்த அவதானமும் , உவகையும் என்பது அவனின் இளமை நோக்கிய ஏக்கமும் (Nostalgia)பழைய உற்பத்தி முறைமையின் தொகுப்புமாகும். செய்த் இந்த சிந்தனை முறைமையை இடைக்கால அந்தலூசிய சிந்தனையாளரான இப்னு ஹாசம் என்பவரிடமிருந்து நீட்சியடைய செய்தார். அதாவது நடப்பு எதார்த்தம் மற்றும் பிரதியாக்கம். இதன் அடிப்படையில் தான் செய்த் குர் ஆன் மற்றும் பைபிளை ஆராய்ந்தார். அதன் காலம் , சூழல் , சமூக அழகியல் போன்றவை புனித பிரதியின்அலகுகளாக பார்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் மத பூடகமாக்கலுக்கும், வெற்று வாதங்களுக்கும் எதிரான செய்த்தின் கோட்பாடுகள் முக்கியமானவை. தன் நேர்காணல்களில் பிரதி, உலகம், அதிகாரம், காலனியம், மதம் குறித்த கோட்பாடுகள் மீதான விமர்சனத்தையே அதிகமும் முன்வைத்தார் . செய்த்தின் இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு அரசியல், அதிகாரம் மற்றும் கலாசாரம் என்ற நூலாக வெளிவந்தது. கீழைத்தேயத்தில் இருந்து புலம் பெயர்ந்து மேற்கத்திய கல்விசார் அறிவுஜீவியாக செயல்பட்டு தன் சிந்தனையால் மேற்குலகிற்கு பெரும் சவாலாக இருந்த எட்வர்ட் செய்த் கிழக்கின் வரலாற்றில் முன்கோடாகவே இன்றும் இருக்கிறார்.
- உயிரோசை